அண்ணா பல்கலை. துணைவேந்தர் பதவி: ரூ50 கோடி லஞ்சம் வாங்கிய எடப்பாடி: ஈவிகேஎஸ் இளங்கோவன் பகீர் புகார்
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் பதவி நியமனத்துக்கு ரூ50 கோடியை லஞ்சமாக நேற்று முன்தினம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாங்கியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
சென்னை அயனாவரத்தில் செய்தியாளர்களிடம் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியதாவது:
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக ராஜாராம் என்பவரிடம் ரூ50 கோடி லஞ்சம் வாங்கியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. ரூ50 கோடி லஞ்ச பணத்தை நேற்று முன்தினம் எடப்பாடி பழனிச்சாமி வாங்கினார்.
இந்த துணைவேந்தர் நியமனம் தொடர்பான அறிவிப்பு நாளை அல்லது நாளை மறுநாள் வெளியிடப்பட உள்ளது. ஊழலில் திளைக்கும் எடப்பாடி பழனிச்சாமி அரசை அகற்ற வேண்டும்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அறிவிக்கும் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
இவ்வாறு இளங்கோவன் கூறினார்.