மத்திய நெடுஞ்சாலைத்துறை தமிழகத்துக்கு ஒதுக்கிய நிதியில் பெரும் ஊழல்: ஈ.வி.கே.எஸ்.
சென்னை: மத்திய நெடுஞ்சாலைத் துறை தமிழகத்துக்கு ஒதுக்கிய நிதியில் ஊழல் நடைபெற்றுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களிடம் இளங்கோவன் கூறியதாவது:
தமிழக நெடுஞ்சாலைத் துறைக்கு 2014-2015-ம் ஆண்டுக்காக மத்திய அரசின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2000 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த தொகையில் 13.5% ஆட்சியாளர்களுக்கு லஞ்சமாக கைமாறி உள்ளது.
மேலும் 10% லஞ்ச தொகை துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள், எம்.எல்.ஏ.க்களுக்கு லஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளது. அதன்பிறகே ரோடு போட டெண்டர் விடப்பட்டு காண்டிராக்டர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் சாலைகள் சரியில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தானாகவே பொது நலவழக்கு தொடர்ந்துள்ளார். சிமெண்டு சாலை அமைத்ததாக கூறி தார்சாலைகளை போட்டிருப்பதை நீதிமன்றமே சுட்டிக் காட்டியுள்ளது. இந்த அரசு லஞ்ச லாவண்ய அரசாக இருக்கிறது.
போக்குவரத்து துறையில் கண்டக்டர், டிரைவர்கள் நியமனத்திற்கு தலா ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கப்பட்டதாக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். அந்த புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை முதல்வர்தான் விளக்க வேண்டும்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ஒரு அந்நிய நாட்டு குளிர்பான நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். நிலத்தடி நீர் மாசுபடும். பொது மக்களுக்கு பல்வேறு விதமான தோல் நோய் உருவாகும். எனவே, அந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.
யூரியா உர விலை கட்டுப்பாட்டை மத்திய அரசு ரத்து செய்வது விவசாயிகளை கடுமையாக பாதிக்கும். இந்த முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்.
முட்டை, பருப்பு உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பான ஊழல் குறித்து நான் கூறி இருக்கிறேன். ஆனால் அரசு எதற்கும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதே நிலை நீடித்தால் விரைவில் போராட்டம் நடத்துவோம்.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. போட்டியிடுவதா? வேண்டாமா? யாருக்கும் ஆதரவு அளிப்பதா என்பது பற்றி 27-ந்தேதிக்குள் நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும்.
இவ்வாறு இளங்கோவன் கூறினார்.