3 பேரின் கனவு திவாலாகி விட்டது... ஈவிகேஎஸ் இளங்கோவன் சந்தோஷம்!
சென்னை: சட்டசபைத் தேர்தலில் 3 பேரின் முதல்வர் கனவு காலியாகி விட்டது. லெட்டர் பேடு கட்சிகள் காணாமல் போய் விட்டன என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த இளங்கோவன், தமிழக சட்டசபை காங்கிரஸ் கட்சியின் தலைவர் நாளை தேர்வு செய்யப்படவுள்ளதாகவும், இதற்காக மேலிடப் பார்வையாளர்களான முகுல் வாஸ்னிக், ஷீலா தீட்சித் ஆகியோர் சென்னை வரவுள்ளதாக தெரிவித்தார்.
செய்தியாளர்களுக்கு இளங்கோவன் அளித்த பேட்டியிலிருந்து:

மதுக் கடை திறப்பு நேரம்
மதுக்கடை திறப்பை காலை 10 மணியில் இருந்து 12 மணியாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இது வெறும் கண்துடைப்புதான். இரவு 10 மணி வரை கடை திறந்திருப்பதை முன் கூட்டியே இரவு 7 மணிக்கே அடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். மது விலக்கு அறிவிப்புக்கும் பொருத்தமானதாக இருந்திருக்கும்.

லெட்டர் பேடு கட்சிகள்
தமிழகத்தில் 3 பேரின் முதல்வர் கனவு தகர்ந்துவிட்டது. எதிர்கட்சிகள், லெட்டர்பேடு கட்சிகள் காணாமல் போய் விட்டன. தமிழகத்தில் 3வது பெரிய கட்சியாக காங்கிரஸ் வளர்ந்துள்ளது.

திமுகவுடன் இணைந்து குரல் தருவோம்
சட்டசபைக் கூட்டத் தொடரின் போது தமிழக மக்களின் பிரச்சினைகளுக்காக திமுகவுடன் இணைந்து காங்கிரஸ் குரல் கொடுக்கும். மக்களின் முழுமையான நம்பிக்கையை பெற காங்கிரஸ் தொடர்ந்து செயல்படும்.

பணப்பட்டுவாடா
தேர்தலில் வெற்றி வாய்ப்பு பறிபோனதற்கு ஆளுங்கட்சியின் பணப்பட்டுவாடாவே காரணம். நடந்து முடிந்த தேர்தலில் தேர்தல் கமிஷன் பாரபட்சமாக நடந்து கொண்டது. இதனால் கமிஷனை கண்டித்து காங்கிரஸ் போராட்டம் நடத்தும்.

பணத்தால் கிடைத்த வெற்றி இது
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பணபலத்தால் அதிமுக வெற்றி பெற்று ஜெயலலிதா ஆட்சியை பிடித்துள்ளார். இது உண்மையான வெற்றி அல்ல. திமுக காங்கிரஸ் கூட்டணிக்கும் உண்மையான தோல்வி அல்ல.
ஓட்டுக்கு ரூ. 500 வரை
அதிமுகவினர் ஒரு ஓட்டுக்கு ரூ.200, ரூ.300, ரூ,500 என பணத்தை வாரி இறைத்துள்ளனர். இந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்பட்டு அதிமுகவின் செயல்கள் எதையும் கண்டு கொள்ளவில்லை என்றார் அவர்.












Click it and Unblock the Notifications