வாசன் இங்கேயேதான் இருப்பார், போக மாட்டார்... அடித்துச் சொல்கிறார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்!
சென்னை: ஜி.கே.வாசன் இருக்க வேண்டிய இடம் காங்கிரஸ்தான். அவர் எங்கும் போக மாட்டார். அதை காங்கிரஸ் தலைமையும் விரும்பாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவராக இன்று இளங்கோவன் பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களசை் சந்தித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
ஜி.கே.வாசன் தனிக்கட்சி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளதே என்ற கேள்விக்கு இளங்கோவன் பதிலளிக்கையில்,

ஜி.கே.வாசன் காங்கிரசை விட்டு வெளியே செல்வார் என்று நான் நம்பவில்லை. அவர் வெளியே செல்ல மாட்டார். அவர் இருக்க வேண்டிய இடம் இதுதான். வருத்தங்கள், கோபங்கள் வரும். அதனால் சில கருத்துக்களை கூறுவது இயல்புதான் என்றார் அவர்.
உறுப்பினர் அட்டையில் காமராஜர் படத்தை இடம் பெற அனுமதிக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டு உள்ளதே? என்று கேட்டபோது, காமராஜர் படம் இல்லாமல் உறுப்பினர் அட்டை வெளியிட்டதே இல்லை. ஏதோ சில பேர் கிளப்பி விட்ட வதந்தி இது. காமராஜர்தான் காங்கிரஸ்... காங்கிரஸ்தான் காமராஜர் என்றார் இளங்கோவன்.
மூப்பனார் படத்தையும் இடம் பெற அனுமதிக்கவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டி உள்ளார்களே என்ற செய்தியாளரின் கேள்விக்கு, காமராஜர் படத்துக்கும், மூப்பனார் படத்துக்கும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று மேலிட தலைவர்கள் வெளிப்படையாகவே அறிவித்து விட்டனர். எனவே அது பிரச்சினை அல்ல என்று பதிலளித்தார்.
ஜி.கே.வாசன் தனிக்கட்சி தொடங்க கூடாது என்று நீங்கள் வேண்டுகோள் வைப்பீர்களா என்று ஒரு செய்தியாளர் கேட்டபோது, வாசன் வெளியே செல்ல மாட்டார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியும் அவர் வெளியே செல்வதை விரும்பாது என்று பதில் கொடுத்தார் இளங்கோவன்.












Click it and Unblock the Notifications