திமுக- காங். தொகுதிப் பங்கீட்டு சிக்கலுக்கு தீர்வு வருமா? ராகுலுடன் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆலோசனை
சென்னை: திமுகவுடனான தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் காங். துணைத் தலைவர் ராகுல் காந்தியை தமிழக காங். தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், 2011-ல் போட்டியிட்ட 63 தொகுதிகளை கேட்கிறது. ஆனால் திமுகவோ, தமாகா உள்ளிட்ட கட்சிகளும் வரக் கூடும் என்பதால் அத்தனை தொகுதிகளைத் தர முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறது.

காங்கிரஸ், வாசனின் தமாகாவுக்கு தலா 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யலாம் என்பதும் திமுகவின் எண்ணம். ஆனால் இதை காங்கிரஸ் உடனடியாக ஏற்காததால் திமுகவுடனான தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் ஏற்பட்டது. அத்துடன் வாசன் உள்ள கூட்டணியில் இருக்க வேண்டாம் என ராகுல் முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் டெல்லியில் ராகுல் காந்தியை ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். இச்சந்திப்பின் போது குலாம்நபி ஆசாத், முகுல் வாஸ்னிக் ஆகியோரும் உடனிருந்தனர்.
ஜி.கே.வாசனின் தமாகா இடம்பெற்றிருந்தாலும் அக்கட்சியை விட கூடுதலாக சில தொகுதிகளை பெற்று திமுக அணியிலேயே நீடிக்கலாம் என்பது தமிழக காங்கிரஸ் தலைவர்களின் விருப்பம். இன்றைய ஆலோசனையின் முடிவில் இந்த விருப்பம் நிறைவேறுமா? திமுகவுடனான தொகுதிப் பங்கீட்டின் அடுத்த நகர்வு இருக்குமா? என்பது தெரியவரும்.












Click it and Unblock the Notifications