இதற்குத்தான் ஆசைப்படுகிறாரா ஈவிகேஎஸ் இளங்கோவன்?
சித்தி மீது எனக்கு வெறுப்பு இல்லை என்று கூறியுள்ளார் தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். இதன் மூலம் அவர் சசிகலா தலைமையை ஏற்றுள்ளதாகவே தெரிகிறது.
சென்னை: சித்தி மீது வெறுப்பும் இல்லை, சித்தப்பா மீது கோபமும் இல்லை என்று சொல்லியுள்ளார் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். இதன் மூலம் இவர் அதிமுக கூட்டணிக்கு ஆர்வம் காட்டுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுகவுடன் காங்கிரஸ் கட்சி ரகசியமாக கை கோர்த்துள்ளது என்பது ஜெயலலிதா, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கட்டத்திலேயே கிசுகிசுப்பாக எழுந்தது. காரணம், திருநாவுக்கரசர் போய் சசிகலாவைப் பார்த்துப் பேசியதை அடுத்து ராகுல் காந்தியும் அப்பல்லோவுக்கு வந்தார். இதன் மூலம் அதிமுகவையும், அதிமுக ஆட்சியையும் காப்பாற்றும் முயற்சியில் காங்கிரஸ் இறங்கியுள்ளதாக கூறப்பட்டது.
திருநாவுக்கரரசரும் கூட அடிப்படையில் அதிமுகவைச் சேர்ந்தவர் என்பதாலும், சசிகலா - நடராஜனுடன் நல்ல நட்பில் இருப்பவரும் கூட என்பதால் காங்கிரஸ் கட்சி திமுகவை விட்டு விட்டு அதிமுக கூட்டணிக்குப் போகலாமோ என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது.

இளங்கோவன் பேச்சு
இந்த நிலையில் நேற்று நடந்த தமிழக காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் முன்னாள் தலைவர் இளங்கோவன் கலந்து கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவரிடம் அதிமுக விவகாரங்கள் குறித்தும் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். அதற்கு இளங்கோவன் அளித்த பதில் பல வித ஊகங்களுக்கு வழி வகுத்துள்ளது.

விமர்சித்துப் பலன் இல்லை
அவரிடம் கேட்கபப்ட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், அதிமுக, திமுகவை விமர்சித்து பலனில்லை. ஏனென்றால் நமக்கு சித்தப்பா மீது கோபமும் இல்லை. சித்தி மீது வெறுப்பும் இல்லை என்று கூறினார் இளங்கோவன்.

திமுக இல்லாவிட்டால் அதிமுக
இவரது கருத்து பல சிந்தனைகளுக்கு இடம் தருவதாக அமைந்துள்ளது. திமுக இல்லாவிட்டால் அதிமுகவுடன் கூட்டணிக்கு காங்கிரஸ் இப்போது மட்டுமல்ல, எப்போதுமே தயாராகத்தான் இருந்துள்ளது. அதுதான் அதன் தமிழகப் பாரம்பரியமும் கூட. இப்போது அதிமுக பக்கம் காங்கிரஸ் சற்று அதிகமாக சாய்கிறதோ என்ற எண்ணம்தான் இளங்கோவின் பேச்சு மூலம் தெரிய வருகிறது.

ஜெ. மறைவு குறித்து விளக்கம் கேட்டவர்
சித்தி மீது (சின்னம்மா) வெறுப்பு இல்லை என்று கூறியுள்ளதன் மூலம் சசிகலாவை இளங்கோவன் ஏற்றுக் கொள்வதாகவே கருதப்பட வேண்டியுள்ளது. அதேசமயம், ஜெயலலிதாவின் மரணம் குறித்து அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று சமீபத்தில் கூறியிருந்தார் என்பதும் நினைவில் கொள்ள வேண்டியதாகும்.

தவறி விட்டோம்
நேற்றைய பேட்டியில் கேட்கப்பட்ட இன்னொரு கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், ஜெயலலிதா மறைவால் ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை காங்கிரஸ் கட்சி சரியான விதத்தில் பயன்படுத்தி இருக்கவேண்டும். ஆனால் அதை செய்ய நாம் தவறிவிட்டோம் என்றே நினைக்க தோன்றுகிறது என்று கூறியுள்ளார் இளங்கோவன். இதன் மூலம், பாஜகவிடம் நமது இடத்தைப் பறி கொடுத்து விடக் கூடாது என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சசிகலாவை ஏற்கிறாரா இளங்கோவன்
இளங்கோவனின் பேச்சைப் பார்த்தால் அவர் சசிகலாவின் தலைமையை அங்கீகரித்துள்ளதாகவே எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. ஒரு வேளை நாளை அதிமுகவுடன் கூட்டணி வந்தால் அதையும் இளங்கோவன் ஏற்பார் என்றே கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications