ஈவிகேஎஸ் இளங்கோவன் திடீர் டெல்லி பயணம் – வாசன் கட்சி கொடி ரிலீஸ் பின்னணியில்!
சென்னை: சென்னையில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கட்சிக் கொடியினை வெளியிட்டுள்ள நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் திடீரென்று டெல்லி செல்கிறார்.
வாசன் வெளியேறியதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் வகையில் மாவட்டம் வாரியாக தலைவர் இளங்கோவன் கூட்டத்தை நடத்தி வருகின்றார். அவரது சுற்றுப்பயணம் 28 ஆம் தேதி முடிகிறது. அன்றுதான் வாசன் தொடங்கியுள்ள புதுகட்சியின் மாநாடும் நடைபெறுகிறது.
இந்நிலையில், நேற்று மேலிடம் திடீரென ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு அழைப்பு விடுத்துள்ளது. உடனடியாக அவர் இன்று அவர் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
இதனால் இன்று விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களில் நடக்க இருந்த செயல்வீரர்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இன்று காலைதான் வாசன் தனது புதிய கட்சியின் கொடியை வெளியிட்டார் என்பது நினைவிருக்கலாம்.