”காங்கிரஸ் கட்சியை யாராலும் அழிக்க முடியாது” – மதுரையில் இளங்கோவன் ஆவேசம்!
மதுரை: மதுரையில் நடைபெற்ற காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு மாநில தலைவர் இளங்கோவன், "காங்கிரஸ் கட்சியை யாராலும் அழிக்க முடியாது" என்று சவால் விட்டார்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியபோது, "இந்த நாட்டுக்காக தியாகம் செய்தது காங்கிரஸ் கட்சி. இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி போன்றவர்கள் உயிரை தியாகம் செய்தனர். உயிர் தியாகம் செய்து அர்ப்பணிப்பு உணர்வோடு நாட்டை காக்கும் பெருமை காங்கிரஸ் கட்சிக்கு உண்டு.

இன்று ஜனநாயகத்துக்கு சவால் விடும் வகையில் மோடி மஸ்தான் ஆட்சி நடக்கிறது. மோடி சர்வாதிகாரியாக வர துடிக்கிறார். காங்கிரசை ஓழித்து விட்டோம். ஆட்சியை பிடித்து விட்டோம் என்று அவர் நினைக்கிறார். மாநில கட்சிகளையும் ஒடுக்க துடிக்கிறார் மோடியின் இந்த கனவு பலிக்காது.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கருப்பு பணத்தை கொண்டு வந்து அதனை திருப்பி தருவோம் என்று ஆசை காட்டி ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால் இப்போது ஏதாவது நடக்கிறதா? காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த 100 நாள் வேலை திட்டம் எங்கே போனது என்று தெரியவில்லை.
காங்கிரஸ் கட்சியின் திட்டத்தையே மீண்டும் கொண்டு வந்து மோடி மக்களை ஏமாற்ற பார்க்கிறார். தமிழகத்தில் பன்னீர் செல்வத்தின் அரசு செயல்படாத அரசாக உள்ளது. வாசன் தனிக்கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார். அவர் தன்னை ராகுல்காந்திக்கு நிகராக நினைத்து வருகிறார்.
அவர் மீது எனக்கு மதிப்பு உண்டு. ஆனால் தான் எடுத்த முடிவு தவறானது என அவர் விரைவிலேயே உணர்வார். வருகிற 28 ஆம் தேதி அவர் கூறியபடி புதிய கட்சியின் கூட்டம் நடக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. அப்படி நடந்தாலும் 2016 வரை அவரது புது இயக்கம் தாக்குப் பிடிக்குமா என்பது தெரியவில்லை. காங்கிரஸ் இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது. வாசன் வெளியேறியதால் காங்கிரஸ் கட்சி வலுப்பெறும்" என்று பேசினார்.












Click it and Unblock the Notifications