பதவியற்றார்.... இன்று முதல் தமிழக காங்கிரஸ் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வசம்!
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவராக இன்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதவியேற்றுள்ளார். கட்சித் தலைமையின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப தான் செயல்படப் போவதாக இளங்கோவன் கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட கட்சி உடைய ஆரம்பித்து விட்டது. தலைவராக இருந்து வந்த ஜி.கே.வாசன் ஆதரவாளரான ஞானதேசிகன் பதவி விலகி விட்டார். அவரைத் தொடர்ந்து இன்னொரு ஆதரவாளரான கோவை தங்கமும் விலகி விட்டார். மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸை வாசன் தொடங்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவரும் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். நாளை தனது முடிவை அறிவிக்கப் போவதாகவும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை காங்கிரஸ் தலைவராக கட்சி மேலிடம் அறிவித்துள்ளது. இதையடுத்து இன்று காலை சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தார் இளங்கோவன். அவருடன் அவரது ஆதரவாளர்களும் திரண்டு வந்திருந்தனர்.
பின்னர் முறைப்படி புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் இளங்கோவன்.
முன்னதாக நேற்று செய்தியாளர்களிடம் இளங்கோவன் பேசுகையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக என்னை அறிவித்திருக்கிறார்கள். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், துணைத் தலைவர் ராகுல் காந்திக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கண்டிப்பாக அவர்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப என்னுடைய பணிகள் இருக்கும். பதவியேற்ற பின்னர் ஞானதேசிகனை நான் சந்தித்துப் பேசுவேன் என்று அவர் கூறியிருந்தார்.