'தாத்தா' பெரியாரின் 'நாத்திக' குரலாக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்- மழைக்காக "பூஜை" செய்ய கடும் எதிர்ப்பு!!
சென்னை: வருண பகவானுக்கு சிறப்பு பூஜைகள் செய்வதால் மழை பெய்யும் என்று தமிழக அரசுக்கு நம்பிக்கை ஏற்படுமெனில் அறிவியலின் அடிப்படையில் செயல்படுகிற இந்திய வானிலை ஆய்வுத்துறையின் அறிக்கைகளை எப்படி மக்கள் நம்பி ஏற்றுக்கொள்வார்கள்? ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் நியமிக்கப்பட்ட பின்னர் சத்தியமூர்த்திபவனே பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது.
இது ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கை:
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்த மண்ணில் அண்ணாவின் பெயரில் கட்சி தொடங்கி, ஆட்சி நடத்தி வருகிற அ.தி.மு.க.வினரின் மூடப்பழக்க வழக்கங்கள் எல்லையற்று போய்க்கொண்டிருக்கின்றன. அதுபற்றி நாம் கவலைப்படவில்லை.
தமிழக அரசின் நீர் வளத்துறையினுடைய தலைமைப் பொறியாளர் எஸ். அசோகன் மே 26, 2015 ம் நாளிட்ட சுற்றறிக்கை மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அந்த சுற்றறிக்கையின்படி செயற்பொறியாளர்கள் அனைவரும் மழை வேண்டி வருண பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி அதற்கான விவரங்களை ஜூன் 1ம்தேதி மின்னஞ்சலில் தெரிவிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.
தமிழக அரசு என்பது அனைத்து மதங்களுக்கும், வழிபாடுகளுக்கும் பொதுவானதாகவும், தொடர்பில்லாததாகவும் இருக்க வேண்டுமென பலமுறை அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றன. அந்த அரசாணைகளை உதாசீனப்படுத்துகிற வகையில் தமிழக அரசின் நீர்வளத்துறையே இந்துமத சடங்குகள்படி இத்தகைய சிறப்பு பூஜைகளை நடத்த வேண்டும் என்று சொல்வது அப்பட்டமான சட்டவிரோத செயலாகும்.
மத நம்பிக்கையை புகுத்துவதா?
இத்தகைய உரிமை இஸ்லாமிய, கிறிஸ்துவ மதத்தினருக்கும் வழங்குவதற்கு வாய்ப்பிருக்கிறதா? அப்படி வாய்ப்பில்லாத போது குறிப்பிட்ட மதத்தின் நம்பிக்கைகளை மற்றவர்கள் மீது புகுத்தலாமா?
அனுமதிக்க முடியுமா?
அ.தி.மு.க.வினர் செயல்படுவதை பற்றி நாம் விமர்சிக்க விரும்பவில்லை. ஆனால் தமிழக அரசின் துறையைச் சார்ந்த தலைமைப் பொறியாளரே ஒரு குறிப்பிட்ட மதச்சார்பு நிலையை எடுப்பதை எப்படி அனுமதிக்க முடியும்?
மூடப்பழக்க வழக்கம்
இத்தகைய சட்ட விரோதச் செயல்கள் நடைபெறுவதை உடனடியாக தடுத்த நிறுத்த வேண்டுமெனில் முதற்கட்டமாக சுற்றறிக்கை அனுப்பிய குறிப்பிட்ட அரசு அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அப்படி நடவடிக்கை எடுத்தால் தான் இத்தகைய மூடப்பழக்க வழக்கங்களை தடுத்து நிறுத்த முடியும்.
வானிலை அறிக்கை
வருண பகவானுக்கு சிறப்பு பூஜைகள் செய்வதால் மழை பெய்யும் என்று தமிழக அரசுக்கு நம்பிக்கை ஏற்படுமெனில் அறிவியலின் அடிப்படையில் செயல்படுகிற இந்திய வானிலை ஆய்வுத்துறையின் அறிக்கைகளை எப்படி மக்கள் நம்பி ஏற்றுக்கொள்வார்கள்?.
உடனே நிறுத்துங்க
அறிவியலில் அற்புதங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிற நவீன யுகத்தில் இத்தகைய பிற்போக்குத்தனமான நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.