5 முறை மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பழுதாகியதால் ஸ்தம்பித்த முத்தரசநல்லூர்
திருச்சி: ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில், 5 முறை வாக்குப் பதிவு எந்திரம் பழுதானதால் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்ட முத்தரச நல்லூரில் வாக்குப்பதிவு ஒருவழியாக நிறைவுற்றது.
ஏற்கனவே காலையில், ஓலையூர் மற்றும் அதவத்தூர் வாக்குச்சாவடிகளில் மின்னணு இயந்திரக் கோளாறால் வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, இயந்திரம் சரிசெய்யப்பட்ட பின்னர் 45 நிமிடங்கள் தாமதமாக துவங்கியது.
அதே போன்று முத்தரசநல்லூர் வாக்குச்சாவடியில் ஏற்கனவே இரண்டு முறை மின்னணு இயந்திரம் பழுதடைந்து வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு மீண்டும் நடைபெற்றது.

இந்நிலையில் 3 ஆவது முறையாக மதியம் 1.30 மணியளவில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் மீண்டும் கோளாறு ஏற்பட்டது. பலர் கடுப்பாகி வீடு திரும்பத் தொடங்கி விட்டனர். மீண்டும் இரண்டு முறை பழுதடைந்து 5ஆவது முறையாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டிருந்தது.
ஆத்திரமடைந்த வாக்காளர்கள் வாக்குச்சாவடி அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மேலும், பழுதான வாக்குப் பதிவு இயந்திரத்திற்கு பதிலாக புதிய இயந்திரத்தினை மாற்ற வேண்டும். இல்லையெனில் அவ்வாக்குச்சாவடிக்கு மறுவாக்குப் பதிவினை அறிவிக்க வேண்டும் என்று தேர்தல் அதிகாரியின் வாகனத்தை முற்றுகையிட்டு வாக்காளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்பின்னர் வாக்கு பதிவு இயந்திரத்தின் கோளாறு சரி செய்யப்பட்டு வாக்குப்பதிவானது மீண்டும் துவங்கி மாலை ஆறு மணியுடன் முடிவடைந்தது.












Click it and Unblock the Notifications