காவிரி டெல்டாவில் திமுகவை கட்டிக் காத்த கோ.சி.மணி !
ஊராட்சிமன்றத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர், சட்டமேலவை உறுப்பினர், அமைச்சர் என பல பொறுப்புகளை வகித்தவர் கோ.சி.மணி
தஞ்சை: உடல்நலக்குறைவு காரணமாக கும்பகோணம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. முன்னாள் அமைச்சர் கோ.சி. மணி இன்று காலமானார்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த மேக்கிரி மங்கலத்தில் 1929 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 ஆம் தேதி பிறந்தார் கோ.சி. மணி. ஊராட்சிமன்ற தலைவராக பொது வாழ்க்கையை துவங்கிய கோ.சி.மணி. காவிரி டெல்டா பகுதிகளில் திமுக கட்சியை வளர்த்தவர்களில் ஒருவராக திகழ்ந்தவர்.

ஊராட்சிமன்றத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர், சட்டமேலவை உறுப்பினர், அமைச்சர் என பல பொறுப்புகளை வகித்த அவர், ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் திமுக செயலராக நீண்ட காலம் பதவி வகித்தவர்.
தி.மு.க. ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சி, விவசாயம் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் கோ.சி. மணி. தி.மு.க.வின் உயர்மட்டக்குழு உறுப்பினரான கோ.சி. மணி 4 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 1968 முதல் 1980 வரை 12 ஆண்டுகள் தமிழக சட்டமேலவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.
87 வயதான கோ.சி.மணி கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று இரவு 9.10 மணிக்கு அவர் உயிர் பிரிந்தது.












Click it and Unblock the Notifications