கரூர்: மாஜி மா.செ. செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களை கூண்டோடு கட்டம் கட்டிய ஜெ.!
சென்னை: கரூர் மாவட்ட அதிமுக பொருளாளர் பிகேஎஸ் முரளி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் 4 பேரை கட்சியை விட்டு அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அதிரடியாக நீக்கியுள்ளார். கட்சி நடவடிக்கைக்கு எதிராக செயல்பட்டதாக கூறி அவர்கள் நால்வரும் நீக்கப்பட்டுள்ளனர் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவர்கள் அனைவரும் கரூர் மாவட்ட மாஜி மா.செவும், அமைச்சருமான செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அ.தி.மு.க.,வில் செல்வாக்குடன் வலம் வந்த, செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி மற்றும் மாவட்ட செயலர் பதவி, சில மாதங்களுக்கு முன் பறிக்கப்பட்டது.

இதனால், புதிய மாவட்ட செயலராக விஜயபாஸ்கர் என்பவர் நியமிக்கப்பட்டார். செந்தில் பாலாஜியின் பதவி பறிக்கப்பட்ட பின்னரும், விஜயபாஸ்கர், எம்.பி தம்பித்துரை ஆகியோருக்கு எதிராக தனி கோஷ்டியுடன் செயல்பட்டு வந்தார் செந்தில் பாலாஜி.
கரூர் மாவட்டத்தில் எது நடந்தாலும் தனித்தனியாகத்தான் நடத்துவார்களாம். வெள்ள நிவாரண நிதியைக்கூட தனித்தனியாகவே மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் செந்தில் பாலஜியின் ஆதரவாளர்கள் நீக்கப்பட்டதற்குக் காரணம் பஸ் டெப்போ மோதல் வழக்கு என்கின்றனர் அதிமுகவினர்.
கரூர் - கோவை ரோட்டில் ஒன்றியச் செயலாளர் பாஸ்கர் தனது காரில் சென்ற போது, தனியார் பஸ் டெப்போவில் இருந்து வெளியே வந்த பஸ் மோதியதாம் இதில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. பாஸ்கருக்கு ஆதரவாக, சம்பவ இடத்திற்கு வந்த கவுன்சிலர் தானேஸ் முத்துக்குமார், மாவட்ட பொருளார் முரளி ஆகியோரும் டெப்போவிற்கு வந்து டிரைவரை தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் வாட்ஸ் அப்பில் வலம் வந்தது. இதுபற்றி மேலிடத்திற்கு கரூர் மாவட்ட அதிமுகவினர் புகாரை தட்டிவிடவே , செந்தில் பாலாஜி ஆதரவாளர்களான, கரூர் மாவட்ட அ.தி.மு.க., பொருளாளர் முரளிதரன், மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞர் அணிச் செயலர் பாஸ்கரன், கரூர் நகராட்சி கவுன்சிலர் தானேஷ், மேலப்பாளையம் ஊராட்சி செயலர் விக்னேஷ் ஆகியோர், கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி உத்தரவிட்டுள்ளார் ஜெயலலிதா. கட்சி மேலிடத்தில் அதிரடியால் கரூர் மாவட்ட அதிமுகவில் உள்ள கோஷ்டியினர் அடங்கிப்போயுள்ளனர்.












Click it and Unblock the Notifications