கர்நாடகாவை போல் தமிழகத்துக்கும் தனிக் கொடி- இந்திய தேசிய லீக் கோரிக்கை!
சென்னை: தமிழகத்துக்கு தனிக் கொடியையும், தனி தமிழ் நாளையும் அரசு அறிவிக்க வேண்டும் என்று இந்திய தேசிய லீக் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான எம்.ஜி.கே. நிஜாமுதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்துக்கு தனி கொடியும், தனி தமிழ் நாளும் அறிவிக்க வேண்டும் என நான் 1996-ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் வலியுறுத்தினேன். முதலில் இது தவறாகப் பொருள் கொள்ளப்பட்டு அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது. பின்னாளில் அந்த வலியுறுத்தல் அவைக் குறிப்பில் சேர்க்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, நான் பல முறை இக்கோரிக்கையை சட்டப்பேரவையில் வலியுறுத்தியுள்ளேன்.
தற்போது, கர்நாடக மாநிலத்துக்குத் தனி கொடியை ஏற்படுத்த அந்த மாநில அரசு ஒரு குழுவை அமைத்திருப்பதாக ஊடக செய்திகள் மூலம் அறிய முடிகிறது. கர்நாடக அரசின் இந்த நிலைப்பாடு, அந்த மாநில மக்களின் எண்ண ஓட்டத்தை பிரதிபலிப்பதாகவும், மக்களின் விருப்பத்துக்கு சட்ட அங்கீகாரம் பெற்றுத் தரும் முயற்சியாகவும் இருப்பது வரவேற்கத்தக்கது.
மாநிலத்துக்குத் தனிக் கொடி அளிப்பது இந்திய கூட்டமைப்பை வலுப்பெறச் செய்யுமே தவிர, இந்திய இறையாண்மையை எவ்விதத்திலும் பாதிக்காது என்பதை உணர்ந்து, கர்நாடக அரசின் இந்த முடிவைப் பின்பற்றி தமிழகத்துக்கு தனி கொடியும், தனி தமிழ் நாளும் அறிவிக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு நிஜாமுதீன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.