ஜெ.வை மருத்துவமனையில் பார்க்க யாரையும் சசிகலா ஏன் அனுமதிக்கவில்லை- மனோஜ் பாண்டியன்
சென்னை: ஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்க்க யாரையும் சசிகலா ஏன் அனுமதிக்கவில்லை என்று முன்னாள் எம்பி மனோஜ் பாண்டியன் கேள்வி எழுப்பினார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இன்று அப்பல்லோ நிர்வாக அலுவலர் சுப்பையா விஸ்வநாதன் ஆஜரானார். அவரிடம் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற நாட்களில் பதிவான சிசிடிவி காட்சிகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
சசிகலா தரப்பு
அப்பல்லோ வெளியிட்ட மருத்துவ அறிக்கைகளுக்கும் பலரது வாக்குமூலங்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் குறித்தும் சுப்பையாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவர்களிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை நடத்தினர்.
சசிகலா தரப்பு வழக்கறிஞர்
அதிமுக முன்னாள் எம்பி மனோஜ்பாண்டியனும் ஆணையத்தில் ஆஜரானார். ஏற்கெனவே கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட விசாரணையின் போது மனோஜ் பாண்டியன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார்.
2 பணிப்பெண்கள்
இதைத் தொடர்ந்து மனோஜ் பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் போயஸ் கார்டனில் ஜெயலலிதா மயங்கி விழுந்தார் என்பது ஊர்ஜிதமாகியுள்ளது. அப்போது அங்கிருந்த 2 பணிப்பெண்களை ஏன் இன்னும் விசாரிக்கவில்லை என ஆணையத்தில் கேட்டுள்ளேன்.
ஏன் அனுமதிக்கவில்லை
அனைத்து வாக்குமூலங்களிலும் முரண்பாடு உள்ளது. ஜெ. மரணத்தில் மர்மம் நீங்க வேண்டும். சில போலீஸ் அதிகாரிகள் உண்மையை மறைத்து சாட்சி கூறியுள்ளனர். ஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்க்க யாரையும் சசிகலா ஏன் அனுமதிக்கவில்லை.
நல்ல முடிவு
போயஸ் தோட்டத்தில் இருந்து அப்பல்லோவுக்கு அழைத்து சென்ற போது என்னை எங்கே அழைத்து வந்துள்ளீர்கள் என்று ஜெயலலிதா சசிகலாவிடம் கேட்டதாக அவர் கூறியுள்ளார். எனவே ஜெயலலிதா மயக்கமான நிலையில்தான் வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார் என்பது ஊர்ஜிதமாகியுள்ளது. ஆறுமுகசாமி ஆணையத்தின் முடிவு நல்ல முடிவாக இருக்கும் என்றார் அவர்.