எக்ஸிட் போல் முடிவுகள் எல்லாமே தவறு: சொல்கிறார் 'ஏர்போர்ட்' நாசா
சென்னை: 2004 மற்றும் 2009ம் ஆண்டு தேர்தல்களில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன. ஆனால் அப்படியா நடந்தது. இந்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் எல்லாம் தவறு என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான 9 கட்ட வாக்குப்பதிவு திங்கட்கிழமை மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. இதையடுத்து மாலை 6.30 மணியில் இருந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இந்த கருத்துக்கணிப்புகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்று தெரிய வந்துள்ளது. இந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் காங்கிரஸுக்கு சாதகமாக இருக்காது என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் இது குறித்து மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறுகையில்,
கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் கவலை அளிக்கும் விதமாக உள்ளது. இந்த சூழலில் 3வது அணியின் துணையோடு காங்கிரஸ் ஆட்சி அமைக்கும். 2004 மற்றும் 2009ம் ஆண்டு தேர்தல்களில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன. ஆனால் அப்படியா நடந்தது. இந்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் எல்லாம் தவறு என்றார்.