ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தில் தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டன- தாமதமாக புறப்பட்டன ரயில்கள்!
சென்னை: இலங்கையில் 5 தமிழக மீனவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தால் நேற்று ரத்து செய்யப்பட்ட அனைத்து ரயில்களும் இன்று முழுமையாக இயக்கப்பட்டன. இருப்பினும் தண்டவாளங்களை சீரமைக்கும் பணி தாமதமானால் ரயில்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.
2011ஆம் ஆண்டு நவம்பர் 28-ந் தேதியன்று கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 5 பேர் போதைப் பொருள் கடத்தியதாக இலங்கை கடற்படை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் கொழும்பு உயர்நீதிமன்றம் 5 தமிழக மீனவருக்கும் நேற்று தூக்கு தண்டனை விதித்தது.

இதற்கு கண்டனம் தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் போர்க்கோலம் பூண்டதால் அப்பகுதியே நேற்று பற்றி எரிந்தது. ரயில் தண்டவாளங்கள் பெயர்க்கப்பட்டதால் ராமேஸ்வரத்துக்கான அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.
பின்னர் தமிழக அரசுத் தரப்பில் சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்றதால் போராட்டத்தைக் கைவிட்டு மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.
இதனைத் தொடர்ந்து நேற்று ரத்து செய்யப்பட்ட அனைத்து ரயில்களும் இன்று இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை 5 மணிக்குப் புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 9 மணிக்கு புறப்படும்;
நேற்று இரவு 8 மணிக்கு புறப்பட வேண்டிய ராமேஸ்வரம்- சென்னை சேது எக்ஸ்பிரஸ் இன்று காலை 9.30 மணிக்கு புறப்படும்;
நேற்று இரவு 8.45 மணிக்கு புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் -குமரி ரயில் இன்று காலை 10 மணிக்கு புறப்படும்;
இன்று காலை 5.35 மணிக்குப் புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் - மதுரை ரயில் காலை 10.30 மணிக்கு புறப்படும்;
இவ்வாறு ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது.
ஆனால் ரயில் தண்டவாளங்களை சீரமைக்கும் பணி தொடர்வதால் அறிவித்தபடி ரயில்கள் எதுவும் புறப்படவில்லை. தண்டவாளங்கள் அனைத்தும் சீரமைக்கப்பட்டு ரயில்கள் புறப்பட பல மணி நேர தாமதமாகும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications