வர்தா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வந்து விட்டது பேஸ்புக் ஃசேப்!
வர்தா புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருப்பதி, பெங்களூர் மக்களுக்கு பேஸ்புக் ஃசேப் உதவிக்கரம் நீட்டுகிறது.
சென்னை: வர்தா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, உதவிக்கரம் நீட்டுகிறது பேஸ்புக் ஃசேப் ஆப்ஷன்.
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் நாட்டில் 'பேஸ்புக்' பயன்படுத்துவோர் எண்ணிக்கை பல கோடியாகும். வர்தா புயல் பாதித்த சென்னையில், நண்பர்கள் பாதுகாப்பாக உள்ளனரா? பாதுகாப்பு இன்றி, உதவி எதிர்பார்க்கின்றனரா என்பதை, அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில், 'பேஸ் புக்', தனது பக்கத்தில், நேற்று முதல் சிறப்பு வழிமுறைகளை இயக்கி வருகிறது.
சென்னை, திருப்பதி, புதுச்சேரி, பெங்களூர் பகுதியை இருப்பிடமாக பேஸ்புக்கில் பதிவு செய்தவர்களின் 'பேஸ்புக்' பக்கத்தில், 'சேப்', 'அன்சேப்' என்கிற இருவகை 'ஆப்ஷன்' கொடுக்கப்பட்டுள்ளன. உதவி கிடைக்காதோர், 'அன்சேப்' வழிமுறையை தேர்வு செய்து, தனது இருப்பிடம், தேவைப்படும் உதவியை பதிவுசெய்தால், உடனடியாக, வெவ்வேறு பகுதிகளில் உள்ள நண்பர்களுக்கு, அத்தகவல் சென்றடைகிறது. இதன் மூலம், பாதிக்கப்பட்டவர்கள், பாதுகாப்பான இடங்களில் உள்ள நண்பர்கள் மூலம், உதவி பெற முடியும்.
பாதுகாப்பாக உள்ள நபர்கள், தாங்களே சுயமாகவே, 'சேப்' என்கிற வழிமுறையை தேர்வு செய்தால், அனைத்து நண்பர்களுக்கும், பச்சை நிற 'டிக்-மார்க்' உடன், சம்பந்தப்பட்டவர் பாதுகாப்பாக உள்ளார் என, தகவல் சென்றடைகிறது.நண்பர், உறவினர் பாதுகாப்பாக உள்ளார் என, நன்கு தெரிந்திருப்பின், அவரது நட்பு வட்டத்தில் உள்ள வெளிநபர்களும், சென்னை நண்பருக்கு பதிலாக, 'சேப்' என்கிற தேர்வை பதிவு செய்து, அனைவருக்கும் தெரிவிக்கலாம்.
cyclone vardah என்ற பெயரில் இந்த ஆப்ஷனை பேஸ்புக் கொண்டுவந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் சென்னையை பெருவெள்ளம் புரட்டி போட்டபோதும், பேஸ்புக் இதேபோன்ற உதவியை செய்தது குறிப்பிடத்தக்கது.