போலி இருப்பிடச் சான்றிதழ்.. மேலும் 2 மாணவர்களுக்கு சம்மன்.. இன்று ஆஜராக உத்தரவு
போலி இருப்பிடச் சான்றிதழ் கொடுத்து நீட் கவுன்சலிங்கில் இடம்பெற்ற கேரளாவைச் சேர்ந்த மேலும் இரு மாணவர்களுக்கு போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.
சென்னை: இரட்டை இருப்பிடச் சான்றிதழ் கொடுத்த விவகாரத்தில் கேரளாவை சேர்ந்த மேலும் இரு மாணவர்களுக்கு போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.
நீட் தேர்விலிருந்து விலக்கு கிடைக்குமா கிடைக்காதா என்று காத்திருந்து காத்திருந்து மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். ஒரு வழியாக தேர்வு நடைபெற்றது. எனினும் மருத்துவ கலந்தாய்வை பிளஸ் 2 அடிப்படையில் நடத்த வேண்டும் என்றும் நீட் அடிப்படையில் நடத்த வேண்டும் என்று வழக்கு போடப்பட்டது.
இதையடுத்து ஒருவழியாக நீட் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு தொடங்கியது. இந்நிலையில் நேற்று ஓமந்தூரார் தோட்டத்தில் நடைபெற்ற மருத்துவ கலந்தாய்வுக்கு கேரளாவை சேர்ந்த சில மாணவர்கள் வந்தனர்.
அவர்களது இருப்பிட சான்றிதழை சரிபார்த்த போது அவர்கள் கேரளாவில் நடைபெற்ற கவுன்சலிங்கிலும் கலந்து கொண்டது தெரியவந்தது. விசாரணையில் போலி இருப்பிடச் சான்றிதழ் பெற்று அதை வைத்து தமிழகத்தில் மருத்துவ படிப்பில் சேர முற்பட்டது தெரியவந்தது.
7 பேர் சிக்கினர்
மொத்தம் 7 மாணவர்கள் போலியாக முகவரி சான்றிதழ் அளித்ததும் அதில் 3 பேருக்கு மருத்துவ படிப்பில் சேர வாய்ப்பு வழங்கப்பட்டு விட்டதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மற்ற 4 பேருக்கு கலந்தாய்வில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டது
போலீஸ் விசாரணை
பொதுவாக இருப்பிடச் சான்றிதழானது 5 ஆண்டுகள் ஒரே இடத்தில் வசித்தால் மட்டுமே வழங்கப்படும். இவ்வாறு இவர்களுக்கு போலியாக சான்றிதழ் வழங்கிய அதிகாரி குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 பேருக்கு சம்மன்
போலி இருப்பிட சான்றிதழ் கொடுத்த கேரளாவை சேர்ந்த ஆசிப் சுலைமான் என்ற மாணவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ள போலீஸார் அவர் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து கேரளாவைச் சேர்ந்த முகமது நிஜாஸ், இஜாஸ் முகமது ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இன்று ஆஜராக உத்தரவு
அதன்படி இன்று மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் மூன்று பேரும் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே அவர்களுக்கு போலி சான்றிதழ் வழங்கிய அரசு அதிகாரி குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவர்கள் 7 பேர் மட்டும்தானா அல்லது இன்னும் தோண்ட தோண்ட பூதம் கிளம்புமா என்று போலீஸார் வெவ்வேறு கோணத்தில் விசாரணையை முடுக்கியுள்ளனர்.