நெல்லையில் போலி அழைப்புகள் மூலம் ஆம்புலன்ஸ் அலைக்கழிப்பு... விஷமிகளின் வீண் விளையாட்டு
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் விஷமிகள் வேண்டாத அலைப்புகள் மூலம் உயிர் காக்கும் ஆம்புலன்சை அலைய விடுவதால் உயிர்கள் பலியாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதில் தீயணைப்பு படையினரும் சிக்கி தவித்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி தலைமை நிலையம் பாளையங்கோட்டையில் உள்ளது. இதன் கீழ், பேட்டை, வள்ளியூர், திசையன்விளை நாங்குநேரி, சேரன்மகாதேவி, ஆலங்குலம், அம்பை, தென்காசி, செங்கோட்டை, சுரண்டை, கடையநல்லூர், சங்கரன்கோவில், வாசுதேநல்லூர் ஆகிய இடங்களிலும் தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. பாளையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நான்கு பெரிய தீயணைப்பு வண்டிகளும், சிறிய 2 தீயணைப்பு வண்டிகளும் உள்ளன.

இங்கு 24 மணி நேரமும் மூன்று ஷிப்ட்டில் 14 பேர் பணியாற்றி வருகின்றனர். சமீப காலமாக பாளை தீயணைப்பு நிலையத்துக்கு போலி அழைப்புகள் அதிக அளவில் வருகின்றன. இதை உண்மை என கருதி தீயணைப்பு நிலைய வீரர்கள் வாகனத்தில் விரைகின்றனர். ஆனால் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்பதால் அவர்கள் அலைக்கழிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் வாகனங்களுக்கு எரிபொருள், வீரர்கள் உழைப்பு வீணாகி வருகிறது.
இதில் ஆம்புலன்சும் தப்பவில்லை. மாலையில் பாளை தீயணைப்பு நிலையத்துக்கு செல்போனில் தொடர்பு கொண்டவர் தன் நண்பர் வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் சாலையில் பாலம் அருகே ரயில்வை பாலம் பகுதியில் குதித்து விட்டதாகவும் காப்பாறும் படியும் அழுதபடி கூறியுள்ளார். அதன்பேரில் 108 ஆம்புலன்சுக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்தனர் 108 ஆம்புலன்ஸ் குழுவினர். ஆனால் அங்கு அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்பதும் அத போலி அழைப்பு என்பதும் தெரிய வரவே ஆம்புலன்ஸ் ஊழியர்கள் திரும்பி சென்றனர். இது குறித்து அந்த நபரை செல்போனில் அழைக்கவே அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதை தவிர்க்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.












Click it and Unblock the Notifications