கோவையில் ரூ.83 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்... நோட்டு அடிக்கும் இயந்திரமும் சிக்கியது
கோவையில் ரூ.83 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவை: கோவையில் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது ரூ. 83 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒருவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
கோவை சாய்பாபா காலனியில் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் சென்ற ஆனந்தன் என்பவரை பிடித்து சோதனை செய்தனர்.
அப்போது அவரிடம் கட்டு, கட்டாக பணம் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் அனைத்துமே கள்ளநோட்டுகள் என தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து ரூ. 83 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில் கோவை வேலாண்டிபாளையம்- தடாகம் சாலையில் ஒரு அலுவலகம் செயல்படுவதாக தெரியவந்தது. அங்கு சென்று சோதனை நடத்திய போது கள்ளநோட்டு அச்சடிக்கும் இயந்திரம் கண்டறியப்பட்டது. அந்த இடத்தில் இருந்த கள்ளநோட்டுகளையும் பறிமுதல் செய்த போலீஸார் இந்த சம்பவத்தில் தொடர்புடைய கும்பலை தேடி வருகின்றனர்.