திருப்பூர்: கடன் தொல்லையால் மனைவி, 2 மகன்களுடன் பனியன் நிறுவன அதிபர் தற்கொலை!
திருப்பூர்: கடன் தொல்லை காரணமாக பல்லடம் கணபதி பாளையத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உடல்களை கைப்பற்றிய போலீசார் தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் பொங்கலூரை சேர்ந்தவர் தாமரைக்கண்ணன்,45. இவர் பல்லடம், கணபதிபாளையம் அருகேயுள்ள அல்லாலபுரம் பகுதியில் பனியன் நிறுவனம் வைத்துள்ளார். அந்த நிறுவனத்தின் 3வது மாடியில் குடியிருந்து வருகிறார்.
இன்று காலை 5 மணிக்கு தாமரைக்கண்ணனை, அவரது தந்தை மொபைல் போனில் தொடர்பு கொண்டார். நீண்ட நேரமாகியும் மொபைல் போனை யாரும் எடுக்கவில்லை. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் வீட்டின் கதவை உடைத்து வந்து பார்த்தபோது, ஹாலில் தாமரைக்கண்ணன் தூக்கில் தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
பக்கத்து அறையில், அவரது மனைவி பிரபாவதி, மற்றொரு அறையில் அவரது மகன்கள் தனுஷ்,14, அனுஷ்10 வாயில் டேப் வைத்து ஒட்டி தூக்கில் தொங்கியவாறு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. கடன் தொல்லை காரணமாக அவர்கள் தற்கொலை செய்திருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்திலேயே திருப்பூரில்தான் அதிக தற்கொலைகள் நிகழ்வதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. பனியன் தொழிலாளர்கள், உரிமையாளர்கள் பலரும் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருகிறது. தற்கொலைகளை தடுக்க உரிய நடவடிக்கையும், ஆலோசனையும் வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.