தேசியப் பறவைக்கு “விஷம்” – 5 மயில்களைக் கொன்ற விவசாயிக்கு வலை
கோவை: கோவையில் மயில்களுக்கு விஷம் வைத்து கொன்று பக்கத்து தோட்டத்தில் போட்ட விவசாயி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், காளப்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி நாயக்கர். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் கடந்த இரு நாளுக்கு முன் ஒரு ஆண் மயில் மற்றும் நன்கு பெண் மயில்கள் என மொத்தம் ஐந்து மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன.

இது குறித்து, ராமசாமி நாயக்கர் கோவை வடக்கு வனத்துறையினருக்கும், கோவில்பாளையம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். வனத்துறையினரும், போலீசாரும் விரைந்து சென்று இறந்து கிடந்த 5 மயில்களையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
இதை தொடர்ந்து மண்டல வன உயிரின பாதுகாப்பு அலுவலர் சேகர் மற்றும் கோவை வன அலுவலர் பன்னீர்செல்வம் ஆகியோர் மயில்கள் மர்மமான முறையில் இறந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
அதன்படி, காளப்பட்டியை சேர்ந்த விவசாயி ராமதாஸ் என்பவர் தோட்டத்தில் வெங்காயம் பயிர் செய்துள்ளார். மயில்கள் வெங்காயத்தை நாசப்படுத்தியதால் ஆத்திரம் அடைந்து, உரத்துக்கு பயன்படுத்தப்படும் "ஆர்கானிக் பாஸ்பரஸ்" என்ற ரசாயனத்தை, அரிசியில் கலந்து மயில்களுக்கு வைத்துள்ளார். இதனை தின்ற மயில்கள் செத்துள்ளன.
தனது தோட்டத்தில் மயில்கள் செத்து கிடந்தால் பிடிபட்டு விடுவோம் என்று கருதி, கொல்லப்பட்ட மயில்களை பக்கத்து தோட்டத்தில் கொண்டுபோய் போட்டுவிட்டு இப்போது தலைமறைவாகியுள்ளார்.
அவரை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர் மீது, வனஉயிர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது. பின்னர் இறந்த 5 மயில்களையும் வனத்துறையினர் பரிசோதனை செய்து அடக்கம் செய்தனர்.












Click it and Unblock the Notifications