கர்நாடகத்திற்கு எதிரான பந்த்... ஓ.பி.எஸ்ஸிடம் ஆதரவு கேட்ட விவசாயிகள்
சென்னை: கர்நாடக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் வரும் 28ம் தேதி நடத்தத் திட்டமிட்டுள்ள முழு அடைப்புப் போராட்டம் தொடர்பாக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து விவசாயிகள் ஆதரவு கோரினர்.
மேகதாது அணைத் திட்டத்தில் தீவிரமாக இறங்கியுள்ள கர்நாடக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் வரும் 28ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் குழு முடிவு செய்துள்ளது. மேலும் அனைத்து கட்சி தலைவர்களும் ஒருங்கிணைந்து பிரதமரை நேரில் சந்தித்து காவிரி பிரச்சனை குறித்து எடுத்துரைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்திற்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு பாஜக ஆதரவு தர மாட்டோம் என்று தெரிவித்துள்ளது. அதேசமயம், விவசாயிகள் சங்கங்கள் கூட்டாக இந்த முடிவை எடுத்துள்ளதால், அதை எதிர்க்க மாட்டோம் என்று அக்கட்சி கூறியுள்ளது.
இந்நிலையில், இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு பெறுவது தொடர்பாக விவசாய சங்கத்தினர் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்தித்தனர். இந்த சந்திப்பு தொடர்பாக அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறுகையில், ‘கர்நாடக அரசைக் கண்டித்து நாங்கள் நடத்த உள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு அரசுப் பேருந்துகளை இயக்காமல், தமிழக அரசு ஆதரவு தர வேண்டும் என முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தோம். மேலும், இந்த போராட்டத்திற்கு அதிமுக ஆதரவு தர வேண்டும் எனவும் நாங்கள் கேட்டுக் கொண்டோம்' என்றார்.












Click it and Unblock the Notifications