டெல்லியில் நாளை நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் தமாகா பங்கேற்கும்: ஜி.கே.வாசன்
சென்னை: டெல்லியில் நாளை தமிழக விவசாயிகள் நடத்தும் மனித சங்கிலி போராட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் பங்கேற்கும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் பங்கீட்டு ஒழுங்காற்றுக் குழு அமைக்க வேண்டும், காவிரியின் குறுக்கே கர்நாடகம் தடுப்பணைகள் கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும், முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பை அளித்து, நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும்,
விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், விளை நிலங்களில் கெயில் எரிவாயு குழாய்கள் பதிப்பதை கைவிட வேண்டும், விவசாயிகளின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் வரும் 2 ஆம் தேதி டெல்லியில் மனித சங்கிலி போராட்டம் நடைபெறவுள்ளது.
இந்த போராட்டத்தில் தமாகா விவசாய அணியும் பங்கேற்கும். விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று வாசன் கூறியுள்ளார்.