மழை இல்லை... பாடை கட்டி ஓப்பாரி வைத்து தூத்துக்குடி விவசாயிகள் நூதன வழிபாடு!
தூத்துக்குடியில் மழை பெய்ய வேண்டி விவசாயிகள் பாடை கட்டி ஓப்பாரி வைத்து ஊர்வலமாக சென்றனர்.
தூத்துக்குடி: தூத்துக்குடியில் மழை பெய்ய வேண்டி விவசாயிகள் பாடை கட்டி ஓப்பாரி வைத்து ஊர்வலமாக சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் விவசாயிகள் கடந்த மாதம் பெய்த மழையை நம்பி தங்கள் விளை நிலங்களில் மானாவாரி பயிர்களான கம்பு, சோளம், மல்லி, உளுந்து, வெங்காயம், சூரியகாந்தி போன்றவைகளை விதைத்தனர். ஆனால் பருவ மழை சரியாக பெய்யாமல் போக்கு காட்டி வருவதால் விளைந்த பயிர்கள் மங்கியும், காய்ந்தும் வீணானது. இதனால் விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.
இந்நிலையில் மழை பெய்ய வேண்டி நூதன வழிபாடு செய்ய விவசாயிகள் முடிவு செய்தனர். அதன்படி வைக்கோல் மற்றும் துணிகளால் உருவ பொம்மை செய்து அதனை பனை ஓலையில் வைத்து பாடை கட்டினர். பின்னர் அதை சுற்றி நின்று ஓப்பாரி வைத்தனர். தொடர்ந்து மேலதாளத்துடன் உருவ பொம்மையை தெரு வழியாக இழுத்து சென்று இடுகாட்டில் எரித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "பல வருடங்களுக்கு முன்பு இது போல் மழை பெய்யாத போது உருவ பொம்மையை எரித்தனர். அதன் பிறகு பரவலாக மழை பெய்தது. அதே நம்பிக்கையில் தற்போதும் உருவ பொம்மையை பாடை கட்டி ஊர்வலமாக இழுத்து சென்று எரித்திருக்கிறோம். இதனால் அடுத்த சில நாட்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கிறோம்" என்று நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.