காவிரி மேலாண்மை வாரியம் கோரி சாஸ்திரி பவன் அருகே மறியல்... இ. கம்யூ. கட்சியினர் கைது!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சியினர் சென்னை சாஸ்திரி பவனை முற்றுகையிட்டனர்.
சென்னை : காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சியினர் சென்னை நுங்கம்பாக்கத்தில் சாஸ்திரி பவனை முற்றுகையிட முயன்றனர். போலீசார் தடுத்து நிறுத்தியதால் சாலையிலேயே அமர்ந்து அவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
காவிரி நீர் தமிழக மக்களுக்கு முறையாக கிடைக்க உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் விவசாய சங்கத்தினரும், அரசியல் கட்சியினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரி பவனை முற்றுகையிட கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய சங்கத்தினர் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. முற்றுகையிட வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் நுங்கம்பாக்கம் சாலையில் கம்யூனிஸ்ட் விவசாய சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.
நடுரோட்டில் அமர்ந்து மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். கம்யூனிஸ்ட் கட்சியினரின் போராட்டத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.