கருணாநிதியை சந்தித்த மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா!
சென்னை: சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியை மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா சந்தித்துப் பேசினார்.
தேசிய மாநாடு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் புதுப்பிக்கவல்ல எரிசக்தி துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறார்.
காஷ்மீர் மாநிலத்தில் தேசிய மாநாடு கட்சியும், காங்கிரசும் இணைந்து கூட்டணி அரசை அமைத்துள்ளன. அங்கு தேசிய மாநாடு கட்சி சார்பில் ஒமர் அப்துல்லா முதல்வராக உள்ளார்.
காஷ்மீரில் ஒமர் அப்துல்லா அரசு செயல்படுத்தும் சில திட்டங்களால், காங்கிரசுக்கும், தேசிய மாநாடு கட்சிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நரேந்திர மோடி பிரதமரானால் ஏற்றுக்கொள்வோம் என கடந்த சில தினங்களுக்கு முன்பு பேசி பரபரப்பை ஏற்படுத்தினார் பரூக் அப்துல்லா. நரேந்திர மோடியை பிரதமராக மக்கள் தேர்வு செய்தால், அது அவர்களது விருப்பம். அவ்வாறு நரேந்திர மோடி பிரதமரானால் அதை எல்லாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
இந்த நிலையில் சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியை மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா சந்தித்துள்ளார். சென்னை சிஐடி காலனியில் உள்ள அவரது இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பின்போது ஆ.ராசா, டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பரூக் அப்துல்லா, கருணாநிதியுடனான சந்திப்பின் போது, அரசியல் பேசவில்லை எனவும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் எனவும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications