மத்திய அரசை கண்டித்து அக்.7-ல் தஞ்சையில் உண்ணாவிரத போராட்டம்: திமுக அறிவிப்பு
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளதை கண்டித்து, வருகின்ற அக்டோபர் 7-ம் தேதி எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் தஞ்சையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது.
காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான விவகாரத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை அக்டோபர் 4ம் தேதிக்குள் அமைக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்த உத்தரவில் திருத்தம் செய்யக் கோரி மத்திய அரசு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முடியாது என்று கூறியுள்ளது.
மத்திய அரசின் இந்த திடீர் முடிவுக்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. சென்னை, தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களில் பிரதமர் மோடியின் உருவபொம்மை எரித்து போராட்டங்களும் நடைபெற்றன.
இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளதை கண்டித்து திமுக போராட்டம் அறிவித்துள்ளது. சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் அக்டோபர் 7-ம் தேதி தஞ்சாவூரில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று திமுக அறிவித்துள்ளது.