கோவையில் தந்தையர் தினம்: தசைசிதைவு நோய் குறித்த விழிப்புணர்வு கூட்டம்.. ஏராளமானோர் பங்கேற்பு
கோவையில் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது.
கோவை: தந்தையர் தினத்தை முன்னிட்டு கோவையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தசை சிதைவு நோய் காரணமாக 20வயதில் நோயின் தாக்கத்தால் உயிரிழப்பு ஏற்படும் நிலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஜூன் 17ஆம் தேதி தந்தையர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, கோவை தென்கரை பகுதியில் தன்னார்வ அமைப்பு சார்பில் விழா நடத்தப்பட்டது. பெற்றோர்கள், தொழிலதிபர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் தசை சிதைவு நோய் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

உலகம் முழுவதும் 3 ஆயிரத்து 500 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு தசை சிதைவு நோய் ஏற்படுவதாகவும், மரபு வழி வருவதாக ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இக்கூட்டத்தில் பேசிய மருத்துவர்கள் தெரிவித்தனர். பெரும்பாலும் ஆண் குழந்தைகளுக்கு குறிப்பாக 3 முதல் 4 வயது உள்ள ஆண் குழந்தைகளுக்கு அதிகம் ஏற்படும் இந்நோய், 10முதல் 12 வயதிற்குள் சக்கர நாற்காலியில் இருக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டு பின் நாளடைவில், அதாவது 20 வயதிற்குள் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
தசையில் புரதச்சத்து குறைவாகும்போது இந்நோயினை இந்தியாவில் அலட்சியமாக எடுத்து கொள்கின்றனர். 3 வயது குழந்தை விழுவது, உட்கார்ந்தால் எழ முடியாதது, படிகளில் ஏற முடியாதது போன்றது இந்நோயின் ஆரம்பகட்ட அறிகுறிகள் மூலம் கண்டறியலாம் என மருத்துவர்கள் கூறினர்.
என்றாலும், அதற்கான விழிப்புணர்வு மிகவும் குறைவாக உள்ளதால் இந்த நோய் தாக்குதல் அதிகரித்து வருவதாக எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள், இந்தியாவில் எத்தனை குழந்தைகளுக்கு இந்நோய் உள்ளது என்பது குறித்த சரியான புள்ளி விவரங்கள் கூட இல்லை என்கின்றனர். அதனால், இதுபோன்று நிகழ்ச்சிகள் மூலம் பெற்றோர்களிடையே இந்நோய் குறித்த புரிதலை ஏற்படுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்துவதே நோக்கம் என்கின்றனர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள்.












Click it and Unblock the Notifications