பெண் கேட்க வரச் சொல்லி நயவஞ்சகமாக காதலன் வெட்டிக் கொலை... காதலியின் தந்தை போலீசில் சரண்!
திருநெல்வேலி: பெண் கேட்க வரச் சொல்லி நயவஞ்சகமாக காதலனை காதலியின் தந்தை வெட்டிக் கொலை செய்துவிட்டு போலீசில் சரண் அடைந்ததால் நெல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவகுருநாதன். எம்எஸ்சி படித்து வி்ட்டு மருந்து விற்பனை பிரிதிநிதியாக வேலை பார்த்து வந்தார். இவர் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்று சொல்லப்படுகிறது. நெல்லை மாவட்டம் தேவர்குளம் அடுத்த இலந்தைகுளத்தை சேர்ந்தவர் கஸ்தூரி.
நர்சிங் படிப்பு படித்த இவருக்கு அரசு வேலை கிடைத்தது. பழநியை அடுத்த நெய்கராபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கஸ்தூரி நர்சாக பணியாற்றி வந்தார். அப்போது கஸ்தூரிக்கும் சிவகுருநாதனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர்.
இந்த காதல் விவகாரம் இருவரின் பெற்றோருக்கும் தெரிய வரவே கஸ்தூரியின் பெற்றோர் நெல்லை மாவட்டம் செங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பணி இடமாற்றம் செய்து விட்டனர். சிவகுருநாதன் தலித் என்பதால் எதிர்ப்பு கடுமையாகவே இருந்துள்ளது. செங்கோட்டை வந்ததால் அவ்வப்போது செங்கோட்டைக்கு வந்து கஸ்தூரியை சந்தித்து பேசிவிட்டு சென்றுள்ளார் சிவகுருநாதன்.
செங்கோட்டைக்கு வந்த பிறகும் காதல் தொடர்ந்ததால் கஸ்தூரியை வேலைக்கு செல்ல வேண்டாம் என்று அவரது பெற்றோர் கடந்த சில நாட்களாக வீட்டில் அடைத்து வைத்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், திடீரென கஸ்தூரியின் தந்தை, கஸ்தூரியிடம் காதலுக்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார். மேலும், சிவகுருவை பெண் கேட்டு வீட்டிற்கு வர சொல்லும்படி கஸ்தூரியிடம் சொல்லியிருக்கிறார். இதனை நம்பிய கஸ்தூரி சிவகுருநாதனிடம் பெண் கேட்டு வருமாறு செல்போனில் தெரிவித்துள்ளார்.
இந்த நயவஞ்சகத் தனம் தெரியாத சிவகுருநாதன், திண்டுக்கல்லில் இருந்து மாலை மேலஇலந்தைகுளம் வந்தார். அங்குள்ள கஸ்தூரியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்த கஸ்தூரியின் தந்தையிடம் பெண் கேட்டிருக்கிறார். அதற்கு கஸ்தூரியின் தந்தை தன் மகளை மறந்துவிட வேண்டும் என்று மிரட்டியுள்ளார். இதனை ஏற்க மறுத்த சிவகுருநாதனை கையில் மறைத்து வைத்திருந்த அரிவாளில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தார் கஸ்தூரியின் தந்தை. படுகாயம் அடைந்த சிவகுருநாதன் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, கஸ்தூரியின் தந்தை போலீசில் சரண் அடைந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.