எல்லா கேள்விக்கும் பதில் சொல்லுங்க... தினகரனிடம் சராமரியாக கேள்வி கேட்ட நீதிபதி
அந்நிய செலாவணி மோசடி வழக்கு விசாரணையின் போது, டிடிவி தினகரனிடம் சராமாரியாக கேள்வி கேட்டார் நீதிபதி மலர்மதி.
சென்னை: குறுக்கு விசாரணையின் போது அனைத்து கேள்விகளுக்கும் பதில் தரவேண்டும் என்று கூறிய எழும்பூர் பொருளாதார குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மலர்மதி, சராமாரியாக கேள்விகளை எழுப்பி தினகரனை திணறடித்தார்.
இங்கிலாந்தில் உள்ள வங்கியில் ரூ.1 கோடியே 4 லட்சத்து 93 ஆயிரம் அமெரிக்க டாலர் மற்றும் ரூ.44 லட்சம் இங்கிலாந்து பவுண்டுகளை டிப்பர் இன்வெஸ்ட்மெண்ட் என்ற நிறுவனத்தின் பெயரில் சட்டவிரோதமாக முதலீடு செய்தது தொடர்பாக கடந்த 1996ம் ஆண்டு டி.டி.வி.தினகரன் மீது மத்திய அமலாக்கப் பிரிவினர் அந்நிய செலாவணி மோசடி வழக்கைப் பதிவுசெய்தனர்.
இந்த வழக்கு எழும்பூர் பொருளாதார குற்றவியல் கோர்ட்டில் நிலுவையில் இருந்து வந்தது.இந்நிலையில் சென்னை உயர்நீதி மன்றம் இந்த வழக்கு விசாரணை விரைந்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனையடுத்து கடந்த பிப்ரவரி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் வரை குறுக்கு விசாரணை நடந்து முடிந்துள்ளது.
இந்நிலையில், எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணக்கு டிடிவி தினகரன் ஆஜரானார். அப்போது, விசாரணைக்கு முன்பே அமலாக்க துறை கேள்விகளை தரவேண்டும் என தினகரன் கோரிக்கை வைத்தார்.
தினகரன் கோரிக்கைக்கு நீதிபதி மலர்மதி கண்டனம் தெரிவித்தார். சிவில் நீதிமன்றம் போல் குற்றம் சாட்டப்பட்டவருக்கு கிரிமினல் நீதிமன்றத்தில் உரிமையில்லை. அதுபோல், அமலாக்க துறையிடம் இந்த கேள்விகளை தான் கேட்க வேண்டும் என குற்றம் சாட்டப்பட்டவர் கேட்கக் கூடாது கூறினார்.
அமலாக்கத் துறை தங்களிடம் இந்தக் கேள்விகளை தான் கேட்க வேண்டும் என்று குற்றம்சாட்டப்பட்டவரே கேட்பது கண்டிக்கத்தக்க ஒன்று. நான் என்ன வேலை செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும். நான் வாங்கும் ஊதியத்திற்கு நான் வேலை செய்ய வேண்டும்.
குற்றம் சுமத்தப்பட்டவருக்கு சிவில் நீதிமன்றத்தில் இருப்பது போல, கிரிமினல் நீதிமன்றத்தில் உரிமை இல்லை என்று தெரிவித்தார். குறுக்கு விசாரணையின் போது குற்றம்சாட்டப்பட்டவர் நேரில் ஆஜராகாததால் ஏற்பட்ட விளைவுகள் இவை என்று தனது அதிருப்தியை வெளியிட்ட நீதிபதி மலர்மதி, விசாரணையை மாலை 4 மணிக்கு ஒத்திவைத்தார்.
4 மணிக்கு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது குறுக்கு விசாரணைக்கு கால அவகாசம் கேட்டார் டிடிவி தினகரன், அதற்கு நீதிபதி மலர்மதி அனுமதி அளிக்க மறுத்து விட்டார். கேட்கும் அத்தனை கேள்விகளுக்கும் பதில் தர வேண்டும் என்று கூறிய நீதிபதி, சராமரியாக கேள்வி எழுப்பினார்.
வழக்கு விசாரணையை 3 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று கூறியுள்ள நீதிபதி, விசாரணையை விரைவில் முடித்து விரைவில் தீர்ப்பளித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.