ராஜ்யசபா தேர்தல்: நாளை வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்
சென்னை: ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை தொடங்குகிறது.
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 18 ராஜ்யசபா எம்.பி.க்களில் 6 பேரின் பதவிக்காலம் வருகிற ஏப்ரல் மாதம் முடிவடைகிறது. காலியாகும் ராஜ்யசபா எம்.பி.க்களுக்கான தேர்தல் பிப்ரவரி 7-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது உள்ள எம்.எல்.ஏ.க்களின் பலத்தின் அடிப்படையில் அ.தி.மு.க. சார்பில் 5 பேர் வெற்றி பெற முடியும். 6-வது வேட்பாளரை நிறுத்தும் அளவுக்கு மற்ற கட்சிகளுக்கு பலம் இல்லை.
தே.மு.தி.க.வில் 28 எம்.எல்.ஏ.க்கள் இருந்தாலும் 7 பேர் அதிருப்தியாளர்களாக உள்ளனர். தி.மு.க.வில் 23 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சிகளின் ஆதரவையும் சேர்த்து தி.மு.க. கூட்டணியின் பலம் 26 ஆக உள்ளது.
இந்த நிலையில் தி.மு.க. தனது வேட்பாளராக திருச்சி சிவாவை அறிவித்துள்ளது. அ.தி.மு.க. வேட்பாளர்கள் யார் என்பதும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
ராஜ்யசபா எம்.பி. பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கான மனு தாக்கல் நாளை தொடங்குகிறது. மனுதாக்கல் செய்வதற்கான கடைசிநாள் ஜனவரி 28. மனுக்கள் பரிசீலனை 29-ந் தேதி நடைபெறுகிறது.
மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் ஜனவரி 31-ந் தேதியாகும். தேர்தல் பிப்ரவரி 7-ந் தேதி நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications