இறுதி வெற்றி நமக்கே என்பதை நினைவில் கொள்ளுங்கள்: ஜெயலலிதா அதிரடி அறிக்கை
சென்னை: நமது நடவடிக்கைகள் தெளிவாக, மன உறுதியுடன் இருந்தால், இறுதி வெற்றி நமக்கே என்பதை தொண்டர்கள் நினைவில் கொண்டிருக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

என் அன்புக்குரிய தொண்டர்கள், என் மீது கொண்ட பேரன்பு காரணமாக சில சந்தர்ப்பங்களில் என்னை குறித்து கவலையுற்று துயரமான முடிவுகளுக்கு ஆளாகி விடுகின்றனர் என்ற செய்தி எனக்கு மிகுந்த வேதனையை தருகிறது. எந்த சூழ்நிலையிலும் மன உறுதியுடன், தெளிவாக நமது நடவடிக்கைகள் அமையும்போது, இறுதி வெற்றி நமக்கே என்பதை தொண்டர்கள் எப்போதும் நினைவில் கொண்டிருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
சமீபத்தில், புதுக்கோட்டை மாவட்டம், குண்டாண்டார்கோவில் ஒன்றியம், உப்பிலிக்குடி ஊராட்சி, கன்னியாப்பட்டி கிளை பொருளாளர் ஆர்.ஜெயக்குமார் மாரடைப்பால் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.
ஜெயக்குமாரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். மேலும் அவரது குடும்பத்திற்கு அ.தி.மு.க. சார்பில் குடும்ப நல நிதியுதவியாக ரூ.3 லட்சம் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
சொத்து வழக்கில் கர்நாடகா அப்பீலுக்கு செல்ல உள்ளதை கேள்விப்பட்டு அதிமுக தொண்டர் மரணமடைந்த நிலையில், வழக்கின் இறுதியில் வெற்றி தனக்கே கிடைக்கும் என்பதை ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications