சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் டூல் வேன் ரயில் பெட்டியில் தீ விபத்து
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 10வது நடைமேடையில் நிறுத்தப்பட்டிருந்த ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 10வது நடைமேடையில் ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முதலுதவி ரயில் பெட்டியில் உயர் மின் கம்பி அறுந்து விழுந்ததால் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்ட உடன் சம்பவ இடத்திற்கு வந்த 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் பெட்டியில் இருந்த பொருட்கள் எரிந்து சாம்பலாகின. ஆவணங்களும் எரிந்து சாம்பலாகின. இந்த தீ விபத்தில் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
டூல் வேன் என்ற இந்த ரயில் பெட்டியை உடனடியாக பிரித்து எடுத்து தீயை அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ரயில் பெட்டியில் உள்ள பொருட்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.