திருச்சியில் பயங்கரம்.. நள்ளிரவில் குடிசையில் பிடித்த தீயில் சிக்கி 4 பேர் கருகி பலி
திருச்சி: திருச்சியில் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கருகி பலியானார்கள். இதனால் அப்பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது.
திருச்சி ராமச்சந்திர நகர், இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். கூலித் தொழிலாளியான இவர் தனது மனைவி சித்ரா, 8 வயது மகள் காவியா, 6 வயது தேவிகா ஆகியோருடன் குடிசை வீ்ட்டில் வசித்து வந்தார். நேற்று இரவு முருகன் குடும்பத்தினர் வழக்கம் போல தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது நள்ளிரவுக்கு மேல் திடீரென குடிசையில் தீப்பிடித்துக் கொண்டது. குடிசை முழுவதும் தீப்பற்றிக் கொண்டதால் முருகன் குடும்பத்தினரால் வெளியே வர முடியவில்லை. அவர்கள் போட்ட கூச்சலும் வெளியில் யாருக்கும் கேட்கவில்லை.
இதனால் குடிசைக்குள் சிக்கி தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்து போனார்கள். தகவல் அறிந்து போலீஸாரும், தீயணைப்புப் படையினரும் விரைந்து வந்தனர். தீவிபத்து எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை.