மதுரை காமராஜர் பல்கலையில் தீ விபத்து: முக்கிய ஆவணங்கள் தீயில் எரிந்து நாசம்
மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் முக்கிய ஆவணங்கள் தீயில் எரிந்து நாசமாகியது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் வளாகத்தில் உள்ள விருந்தினர்கள் தங்கும் மாளிகைக்கு தீ வைத்து சென்றுள்ளனர். சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருந்தினர் மாளிகை கண்காணிப்பாளரை அறையில் அடைத்து வைத்து விட்டு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர்.
விருந்தினர் மாளிகையில் யார் யார் தங்கி உள்ளனர் என கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. மர்ம நபர்கள் தீ வைத்ததில் முக்கிய ஆவணங்கள் மற்றும் கம்ப்யூட்டர் தீயில் எரிந்து நாசமாகி உள்ளன. இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.
மேலும் மதுரை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் விஜேந்திர பிதாரி சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.