நான்குவழிச் சாலையில் திடீரென பற்றி எரிந்த ஆட்டோ... அதிர்ஷ்டவசமாக 8 பேர் உயிர் தப்பினர்
நெல்லை: நெல்லை அருகே நான்கு வழிசாலையில் திடீரென ஆட்டோ ஒன்று தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 8 பேரும் உயிர் தப்பினர்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை காமராஜர் தெருவை சேர்ந்தவர் சின்னதுரை. மாட்டு வியாபாரியான இவர் பாளை ரெட்டியார்பட்டியில் நடந்த கோயில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். அப்போது அங்கு வந்திருந்த நாகர்கோவிலை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி மாரியம்மாளிடம் அவர் வளர்த்து வரும் மாடுகளை வாங்க விலை பேசினார்.
கோவில் கொடை விழா முடிந்ததும் லோடு ஆட்டோவில் மாரியம்மாள், அவரது மூன்று குழந்தைகள் மற்றும் உறவினர்களான மகேந்திரன், இசக்கிமுத்து, காளிமுத்து ஆகியோருடன் தனது ஆட்டோவில் புறப்பட்டார். ஆட்டோவை சின்னதுரை ஓட்டினார்.
நான்குநேரி அடுத்து மறுகால்குறிச்சி நான்குவழி சாலை விலக்கு அருகே வந்த போது ஆடடோவின் முன் பகுதியல் திடீரென புகை வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சின்னதுரை ஆட்டோவை சாலையோரத்தி்ல் நிறுத்தி விட்டு பார்ப்பதற்குள் தீ மளமளவென பரவியது.
ஆட்டோவில் பயணித்த மாரியம்மாள் உள்ளிட்டோர் பதறி அடித்து வேகமாக இறங்கி உயிர் தப்பினர். இதுகுறித்து நெடுஞ்சாலை பராமரிப்பு துறையினர் அளித்த தகவலின் பேரில் நான்குநேரி தீயணைப்பு நிலைய அலுவலர் வெட்டும்பெருமாள் தலைமையில் மீட்பு குழுவினர் வந்து தீயை அணைத்தனர்.
இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டோவில் தீ விபத்து எப்படி ஏற்பட்டது என விசாரணை நடந்து வருகிறது.