தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலையில் தீ விபத்து: ஒருவர் பலி; 2 பேர் படுகாயம்
கரூர்: கரூர் அருகே உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கரூர் மாவட்டம் புகளூரில் உள்ளது தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம். இந்த நிறுவனத்தில் சுமார் 3000 க்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இதில் சுமார் 1800 நிரந்தரத் தொழிலாளர்களும், சுமார் 1300 ஒப்பந்தத் தொழிலாளர்களும் பணி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் காகித ஆலையில் நிலக்கரி வைக்கப்பட்டுள்ள இடத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஒப்பந்தத் தொழிலாளராக பணியாற்றும் தோட்டக்குறிச்சியை சேர்ந்த சவுந்தர் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், தியாகராஜன் மற்றும் சுப்பிரமணி ஆகியோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் அறிந்த கரூர், வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.