சென்னை சில்க்ஸ் கட்டடம் 2-ஆவது நாளாக எரியும் தீ ... அச்சத்தில் குடியிருப்புவாசிகள்
சென்னை சில்க்ஸ் கட்டடம் இரண்டாவது நாளாக கொழுந்து விட்டு எரிந்து வருவதால் அப்பகுதிவாசிகள் அச்சத்தில் உள்ளன.
சென்னை: சென்னை சில்க்ஸ் இரண்டாவது நாளாக கொழுந்து விட்டு எரிந்து வருவதால் அப்பகுதியினர் தூக்கத்தை தொலைத்துவிட்டு பீதியில் உள்ளனர்.
தியாகராய நகர் சாலையில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு தீப்பிடித்து எரிந்தது. தீயை அணைக்க 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் வீரர்கள் போராடினர்.
எனினும் கடையின் கண்ணாடி ஜன்னல்கள் இடிந்து விழுந்தன. இதனால் கடையின் சுவர்களுக்கு பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட உள்அலங்காரங்கள் உருகி பிளாஸ்டிக் குழம்புகள் வெளியேறின. மேலும் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்திருந்தது.
புகையை உறிஞ்சும் கருவி, நுரையை பீய்ச்சி அடிக்கும் கருவி ஆகியன வரவழைக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இதன் அருகே உள்ள பாலத்தின் மீது போக்குவரத்து நிறுத்தப்பட்டது. விதிமீறல் மீறி கட்டப்பட்டதாக கூறப்படும் இந்த கட்டடத்தின் 4 மாடிகளும் சீட்டுக் கட்டுபோல் சரிந்து விழுந்தன.
இந்நிலையில் 2-ஆவது நாளாக தீ கொழுந்து விட்டு எரிந்து வருவதால் ஹைட்ராலிக் கருவி கொண்டு தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்பகுதியை சுற்றியுள்ள மக்களுக்கு வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.