பொதிகையில் திடீரென பிடித்த தீ.. அதிகாலையில் அலறிய பயணிகள்!
செங்கோட்டை: சென்னையிலிருந்து செங்கோட்டை வந்த பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் மின் கசிவு காரணமாக குளிர் சாதனப்பெட்டியில் தீ ஏற்பட்டு பயணிகளை பெரும் பீதிக்குள்ளாக்கி விட்டது.

சென்னையிலிருந்து நேற்று இரவு 8.30க்கு செங்கோட்டைக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் 26 பெட்டிகளோடு புறப்பட்டது. இன்று அதிகாலை 3.30 மணியளவில் ரயில் திருச்சியை தாண்டிய போது பி 2, ஏ.சி. கோச் பெட்டியில் திடீரென மின்சாரம் தடைபட்டு ஏ.சி. எந்திரம் இயங்காமல் நின்றுள்ளது. இதையடுத்து பயணிகள் புகார் கூறியதையடுத்து மீண்டும் ஏ.சி.எந்திரம் இயங்க வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ரயில் மணப்பாறை அருகே உள்ள செட்டியாபட்டி பகுதியில் சென்ற போது ஏ.சி. எந்திரத்திற்கு செல்லும் வயரில் இருந்து திடீரென தீப்பொறி பறந்து விழுந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் கூச்சலிட்டதுடன் உயிருக்கு பயந்து அங்கும், இங்கும் ஓடியுள்ளனர். பின்னர் அபாய சங்கிலியை இழுத்ததையடுத்து ரயில் செட்டியாபட்டி நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

ஏ.சி. எந்திரத்துக்கு செல்லும் மின் வயர் துண்டிக்கப்பட்டு ஏ.சி. எந்திரம் இயங்காமலேயே ரயில் திண்டுக்கல்லுக்கு புறப்பட்டு வந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் திண்டுக்கல் ரயில் நிலைய மேலாளரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.

ஆனால் அங்கு பழுதை சரி செய்யும் வசதி இல்லை என்று அதிகாரிகள் கூறி சமாதானப்படுத்தினர். இதையடுத்து சுமார் 1 மணி நேரம் தாமதமாக ரயில் மதுரைக்கு புறப்பட்டு வந்துள்ளது. பின்னர் மதுரை ரயில் நிலையத்தில் ஏ.சி. எந்திரம் சரிபார்க்கப்பட்டு 70 நிமிடம் தாமதமாக செங்கோட்டைக்கு ரெயில் புறப்பட்டு வந்தது இதனால் பயணிகள் சுமார் 2 மணி நேரம் கடும் அவதி அடைந்தனர்.

செங்கோட்டைக்கு காலை 11.மணியளவில் வந்த பொதிகை ரயிலில் மின்கசிவு ஏற்பட்ட பெட்டியை சரிபார்க்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுப்பட்டுள்ளனர். அந்த பெட்டியில் இரண்டு மேக்னெட்டில் ஒரு மேக்னெட் பழுது அடைந்தது தான் காரணம் என்று தெரிய வந்துள்ளதாம்.












Click it and Unblock the Notifications