தேவர் சமூகத்திடம் இருந்து கவுண்டர் சமூகத்துக்கு கை மாறிய முதல்வர் பதவி
சென்னை: தமிழக முதல்வர் பதவியானது தேவர் சமூகத்திடம் இருந்து கவுண்டர் சமூகத்துக்கு கை மாறியுள்ளது. அதிமுக அமைச்சரவையில் தேவர் சமூகத்தினர் கை ஓங்கியிருந்த நிலையில் கவுண்டர் சமூகத்துக்கு முதல்வர் பதவியே கிடைத்துவிட்டது.
அதிமுகவுக்கு ஜெயலலிதா தலைமை ஏற்ற பின்னர் அவரது அமைச்சரவையில் தேவர் சமூகத்தினருக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது. 2016 சட்டசபை தேர்தலில் தேவர் சமூகத்தைச் சேர்ந்த 20 பேர் எம்.எல்.ஏக்களாகினர்.
ஆனால் இவர்களில் 9 பேருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. 19 எம்.எல்.ஏக்கள் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களில் 5 பேர் அமைச்சர்கள்.
28 கவுண்டர் எம்.எல்.ஏக்கள்
அதே நேரத்தில் 31 எம்.எல்.ஏக்களைக் கொண்ட தலித் சமூகத்தில் 3 பேருக்கும் 28 எம்.எல்.ஏக்களைக் கொண்ட கவுண்டர் சமூகத்துக்கு 5 பேரும் மட்டுமே அமைச்சர்கள். அத்துடன் ஜெயலலிதாவின் முதல்வர் பதவிக்கு பிரச்சனை வந்தபோதெல்லாம் தேவர் சமூகத்தைச் சேர்ந்த ஓ. பன்னீர்செல்வம்தான் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார்.
முதல்வர், பொதுச்செயலர்
இதனால் அதிமுகவில் சலசலப்பு காலந்தோறும் இருந்து வந்தது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஓ. பன்னீர்செல்வம் முதல்வராக அதே சமூகத்தைச் சேர்ந்த சசிகலா நியமன பொதுச்செயலரானார். இதுவும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
எடப்பாடி பழனிச்சாமி
தற்போது அதிமுக இரண்டாக உடைந்து ஓபிஎஸ், தனி அணியாக இருக்கிறார். சசிகலா சிறைக்குப் போய்விட்டார். இந்த நிலையில் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகி உள்ளார்.
ஏன் தேர்வு?
இதில் வேடிக்கை என்னவெனில் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த கே.ஏ. செங்கோட்டையன், எடப்பாடி பழனிச்சாமியை விட சீனியர். செங்கோட்டையன் மூலம்தான் அரசியலில் ஏற்றம் பெற்றார் எடப்பாடி. ஆனால் சசிகலா கும்பலின் அதிதீவிர நெருக்கத்தால், பினாமி போல செயல்பட்டதால்தான் அந்த கோஷ்டி எடப்பாடி பழனிச்சாமியை தங்களது சாய்ஸாக தேர்வு செய்திருக்கிறது.
ஆதாயம் கிடைக்குமா?
கொங்கு மண்டலத்தில் அதிமுக வலிமையாக இருந்து வரும் நிலையில் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரையே அக்கட்சி முதல்வராகவும் உட்கார வைத்துள்ளது. ஏற்கனவே ஏகப்பட்ட பிளவுகளுடன் இருக்கும் அதிமுகவுக்கு கொங்கு மண்டலத்தில் எடப்பாடியின் தேர்வு ஆதாயத்தை தருமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.