இஸ்ரோவைக் கலக்கிய அரியலூர் பெண் விஞ்ஞானி வளர்மதி - முதல் அப்துல் கலாம் விருதுக்கு சொந்தக்காரர்!
சென்னை: இந்தியாவின் 69வது சுதந்திர தினமான இன்று அப்துல் கலாம் பெயரிலான முதல் விருதை தமிழக முதல்வரிடம் இருந்து பெற்றுள்ளார் இஸ்ரோ இயக்குநரான பெண் விஞ்ஞானி வளர்மதி.
இந்த ஆண்டுக்கான அப்துல் கலாம் விருதை இஸ்ரோ திட்ட இயக்குநர் விஞ்ஞானி வளர்மதிக்கு வழங்கினார். விருதுடன் விஞ்ஞானி வளர்மதிக்கு 8 கிராம் தங்கப் பதக்கம், ரூபாய் 5 லட்சம் ரொக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் ஆகியவற்றை முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கி சிறப்பித்தார்.
இஸ்ரோ நிறுவனத்தின் செயற்கைக்கோள் திட்டங்களில் தொலையுணர்வு செயற்கைக்கோள் திட்டத்தின் முதல் பெண் இயக்குநர் வளர்மதி என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2012 இல் ரிசாட் 1 செயற்கைக்கோள், இந்தியா சார்பில் விண்வெளியில் வெற்றிகரமாக ஏவப்பட்டு தங்குதடையின்றி விண்வெளியைத் தொட்டு வெற்றிபெற்றபோது தேசத்தினை உற்று நோக்க வைத்தவர் வளர்மதி. அந்த செயற்கைக் கோளின் திட்ட இயக்குநரும், இஸ்ரோ விஞ்ஞானியுமான வளர்மது தமிழகம் அரியலூரினைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரிசாட் 1 செயற்கைக்கோளின் திட்ட இயக்குநர், ஐ.ஆர்.என்.எஸ்.எஸ், சரல், ஜிசாட் 7, மார்ஸ் மிஷன், ஜிசாட் 14 என இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் பல திட்டங்களில் சிறப்பாக செயல்பட்டவர் என்ற பெருமைகளை உடையவர், தற்போது இஸ்ரோவின் குரூப் டைரக்டராக உயர்ந்துள்ளார் என்பது தமிழகத்திற்கு மிகப் பெரிய பெருமையாகும்.