ஜெ. ஆட்சி புரிந்த கோட்டைக்குள் "ஜெயா"வுக்கு கிடைத்த அடி.. தலைமைச் செயலகத்தில் இருந்து வெளியேற்றம்!
அதிமுக அணிகள் இணைப்புக்குப் பிறகு அந்தக் கட்சியின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான ஜெயாடிவி முழுக்க முழுக்க அரசுக்கு எதிரான தொலைக்காட்சியாகியுள்ளது.
சென்னை: டிடிவி. தினகரன் வசம் உள்ள ஜெயாடிவி முதன்முறையாக அதிமுக அரசுக்கு எதிரான செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. மேலும் அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிடுவதால் தலைமைச் செயலகத்தில் ஜெயா டிவியின் வாகனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக என்றால் கட்சி, ஆட்சி தொடர்பான செய்திகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட ஜெயா தொலைக்காட்சி மற்றும் திமுக என்றால் சன்டிவி, கலைஞர் டிவி, முரசொலி என்பது கட்சியினர் மட்டுமின்றி மக்களுக்கும் தெரிந்த விஷயமே. ஆளும் கட்சிகளாக இருக்கும் போது அந்தக் கட்சிகளின் தொலைக்காட்சிக்கே அரசு நிகழ்ச்சிகளில் முன்னுரிமை அளிக்கப்படும்.
அதிலும் குறிப்பாக ஜெயா டிவி ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அரசு நிகழ்ச்சிகளுக்கு நேரலை வழங்கும் உரிமைகள் அவர்களைத் தவிர வேறு யாருக்குமே அளிக்காமல் கறார் காட்டினர். இதே போன்று ஜெயலலிதா வீட்டில் இருந்து கிளம்பும் போதிலிருந்த அவருக்கு முன்னால் ஜெயா டிவியின் வாகனம் நிச்சயம் செல்லும்.

தினகரன் வசம் ஜெயா டிவி
இந்நிலையில் அதிமுக அம்மா அணி எடப்பாடி பழனிசாமி அணியாக செயல்படத் தொடங்கியதில் இருந்தே ஜெயா டிவியும், டாக்டர் நமது எம்ஜிஆர் நாளிதழும் மறைமுகமாக எடப்பாடி பழனிசாமியை வசைபாடும் செய்திகளை வெளியிட்டு வந்தன. மேலும் சசிகலாவை கட்சியில் இருந்து நீக்குவதாக பேச்சுகள் அடிபட்ட போதும் கூட சசிகலாவிற்கும் தினகரனும் ஆதரவாக செய்திகள் வெளியிடப்பட்டு வந்தன.

எதிர்ப்பு நிலைப்பாடு
இதே போன்று அதிமுக அணிகளை பாஜக இயக்குவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியது போல மத்திய அரசை விமர்சித்து நமது எம்ஜிஆர் நாளிதழில் அவ்வபோது சித்ரகுப்தன் கவிதைகளும் எழுதப்பட்டன. ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைப்பு குறித்த செய்தியை மற்ற செய்தி ஊடகங்கள் பரபரப்பாக பிரேக்கிங் நியூஸ் போட்டுக் கொண்டிருக்க ஜெயா டிவி மட்டும் கண்டு கொள்ளவேயில்லை.

19ம் ஆண்டில் வந்த மாற்றம்
நேற்று இரவு தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ஜெயலலிதா சமாதி சென்றதை தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. இந்நிலையில் இன்று
ஜெயாடிவி 19ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை கொண்டாடும் வகையில் புத்தம் புதிய பொலிவோடு ஜெயா ப்ளஸ் 24 மணி நேர செய்தி சேனல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதிமுக அரசுக்கு எதிராக
இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது என்று நினைக்கலாம், ஆனால் அங்கு தான் டுவிஸ்ட். ஜெயா டிவியில் எடப்பாடி அரசுக்கு எதிரான செய்திகள் ஒளிபரப்பப்படுகின்றன. முதன்முறையாக அதிமுக அரசை எதிர்த்து அவர்களின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியிலேயே இது போன்று நடக்கிறது.

வாகனத்திற்கு அனுமதி மறுப்பு
இதற்கு உதாரணமாக அரசை கண்டித்து ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நடத்தும் ஆர்ப்பாட்டம் செய்தி தலைப்பு செய்தியில் இடம்பெற்றுள்ளது. இதே போன்று தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களின் பேட்டி மட்டுமே ஒளிபரப்பப்படுகிறது. இதையடுத்து, சென்னை தலைமை செயலகத்தில் ஜெயா டிவிக்கு சொந்தமான நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான வாகனத்தை உள்ளே விட போலீஸ் அதிகாரிகள் மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications