புரட்டாசி மாதத்தால் தாறுமாறாய் இறங்கிய மீன் விலை: விற்பனையும் அமோகம்!
சென்னை: தமிழகத்தில் புரட்டாசி மாதம் தொடங்கியதால் மீன்களின் விலை சரமாரியாகக் குறைந்துள்ளது. இதனால் விற்பனையும் நன்றாகவே அதிகரித்துக் காணப்படுகின்றது.
கடந்த வாரத்தில் விற்பனை செய்யப்பட்ட மீன்களின் விலையானது ரூபாய் 20 முதல் ரூபாய் 150 வரை கிலோவுக்கு சரிந்துள்ளது.
இதனால் விற்பனையும் பெருமளவில் அதிகரித்துக் காணப்படுகின்றது.
வஞ்சிர மீன் விலை:
கடந்த வாரத்தில் ஒரு கிலோ ரூபாய் 350 முதல் ரூபாய் ரூபாய் 300 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த வஞ்சிரம் மீன், நேற்று கிலோவுக்கு ரூபாய் 100 முதல் ரூபாய் 150 வரை குறைந்து, ஒரு கிலோ வஞ்சிரம் மீன் ரூபாய் 250க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே போல், சின்ன வஞ்சிரம் மீன் ஒரு கிலோ ரூபாய் 150க்கு விற்பனையானது.
கொடுவாய் மீன்விலை:
கடந்த வாரத்தில் ஒரு கிலோ கொடுவாய் மீன் ரூபாய் 350க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் நேற்று, கடந்த வாரத்தை காட்டிலும் கிலோவுக்கு ரூபாய் 100 குறைந்து, ஒரு கிலோ கொடுவாய் மீன் ரூபாய் 250க்கு விற்பனையானது.
நண்டு விலை ஜாஸ்திதான்:
மீன்களின் விலை குறைந்திருந்தாலும், நண்டு விலை மட்டும் சற்று உயர்ந்து காணப்பட்டது. கடந்த வாரத்தில் ரூபாய் 80 க்கு விற்பனை செய்யப்பட்ட நண்டு, நேற்று ரூபாய் 100க்கு விற்பனை செய்யப்பட்டது.
வியாபாரிகள் மகிழ்ச்சி:
பொதுவாக, புரட்டாசி மாதம் தொடங்கியதும், மீன்களின் விற்பனை கொஞ்சம் மந்தமாக இருக்கும். ஆனால் தற்போது மீன்களின் வரத்தும் அதிகரித்துள்ளதால், விலையும் குறைந்துள்ளது, விற்பனையும் அதிகமாக உள்ளது. இது வியாபாரிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மட்டன் விலையில் மாற்றம் இல்லை:
மீன்விலை குறைந்த போதிலும், மட்டன் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல், ஒரு கிலோ மட்டன் ரூபாய் 450 முதல் ரூபாய் 550 வரை விற்பனை செய்யப்பட்டது.
சிக்கன் கிலோவுக்கு ரூ.20 குறைவு:
ஆனால் கடந்த வாரத்தில் ஒரு கிலோ ரூபாய் 180 க்கு விற்பனை செய்யப்பட்ட சிக்கன், நேற்று கிலோவுக்கு ரூபாய் 20 குறைந்து, ரூபாய் 160க்கு விற்பனையானது.
சிக்கனுக்கு முட்டை ஃப்ரீ:
அதே சமயத்தில் சிக்கன் வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில், சில கடைகளில் ஒரு கிலோ சிக்கன் வாங்கினால் 6 முட்டைகள் இலவசம் என்ற வாசகங்கள் அடங்கிய விளம்பர போர்டுகள் இருந்ததையும் பார்க்க முடிந்தது.