ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு.. மீனவர்கள் குடும்பத்துடன் கடலில் இறங்கி போராட்டம் !
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து காஞ்சிபுரம் அருகே மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம்: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தும், பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும் காஞ்சிபுரம் அருகே மீனவர்கள் தங்களது குடும்பத்துடன் கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள், தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் நடைபெற்று வரும் எழுச்சிபி போராட்டம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது.
சென்னை மெரீனாவில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு புரட்சி போராட்டம் 5வது நாளாக இரவும், பகலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் ஜல்லிக்கட்டு எழுச்சிப் போராட்டங்கள் களை கட்டியுள்ளன.
இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த கொக்கிலமேடு பகுதியில் உள்ள மீனவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சுமார் 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்களது குடும்பத்துடன் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். பீட்டாவுக்கு எதிராகவும் அவர்கள் முழக்கமிட்டனர்.