வலையில் அதிகளவு சிக்கிய மீன்கள்… மீனவர்கள் மகிழ்ச்சி
வலையில் அதிகளவு மீன்கள் சிக்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வேதாரண்யம்: வேதாரண்யம் தாலுக்கா கோடியக்கரையில் அக்டோபர் முதல் மார்ச் வரை மீன்பிடி சீசன் காலமாகும்.
இந்த மீன்பிடி சீசன் காலத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வரும் மீனவர்கள் இங்கே தங்கி மீன்களை பிடித்து பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். ஆண்டு ஒன்றுக்கு சுமார் 10 கோடி ரூபாய்க்கும் மேல் இந்த வர்த்தகம் நடைபெறும்.
இந்த ஆண்டு இலங்கை கடற்படையால் அடிக்கடி தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு மீன்கள் கொள்ளை அடிக்கும் சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால் சீசன் முடியும் முன்பே மீனவர்கள் சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர்.
இந்நிலையில், கோடியக்கரையில் உள்ள உள்ளுர் மீனவர்களும் தங்கியிருந்த ஒரு சில வெளி மாவட்ட மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்களது வலையில் ஆழ்கடலில் கிடைக்கும் கோலா, நீலக்கால் நண்டு, பர்லா மற்றும் கடல் கொய், மரசூடை, சுறா, பன்னா, பூவாளி, காலா, வாவல், இறால் போன்ற மீன்கள் சிக்கின. குறைந்த அளவே சென்ற படகுகளில் 2 டன் மீன்கள் சிக்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
கோலா மீன் கிலோ ரூ.150-க்கும், நீலக்கால் நண்டு கிலோ ரூ.300-க்கும், பர்லா கிலோ ரூ.150-க்கும், மரக்கூடை ரூ.50-க்கும், சுறா ரூ.250-க்கும், பன்னா ரூ.250-க்கும், பூவாளி ரூ.150-க்கும், காலா ரூ.300-க்கும், வாவல் ரூ.400-க்கும், பெரிய இறால் ரூ.500-க்கும் விலை போனது.
மீன்கள் அதிக அளவில் சிக்கியதால் உற்சாகமடைந்த மீனவர்கள் முழுவீச்சில் கடலுக்கு மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர்.