இலங்கை சிறையில் உள்ள 113 தமிழக மீனவர்கள் விடுதலை: இலங்கை அரசு உத்தரவு
ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் உள்ள 113 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த மூன்று மாதங்களில் ராமேஸ்வரம், மண்டபம், துாத்துக்குடி, நாகை, புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டிணம் பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற 126 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 38 படகைகளை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து தீபாவளி பண்டிகைக்காக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து மத்திய அரசு மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசிடம் வலியுறுத்தியது.
இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்கள் 126 பேரில் 113 பேரை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ய நீதிமன்றங்களுக்கு அந்நாட்டு சட்டத்துறை அமைச்சகம் நேற்று பரிந்துரை கடிதம் அனுப்பியது.
இந்நிலையில், 113 மீனவர்களையும் நாளை மன்னார், ஊர்காவல்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி விடுதலை செய்யப்பட உள்ளனர். அவர்கள் நவம்பர் 10 க்குள் தமிழகம் வருவார்கள் என, ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்தனர்.
மேலும் நவம்பர் 1 ந் தேதி கைது செய்யப்பட்ட துாத்துக்குடியைச் சேர்ந்த 7 பேர், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 6 பேர் ஆகிய 13 பேரையும் விடுவிக்க இலங்கை அரசு மறுத்துவிட்டது. இதனால் அவர்களது குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர். எனினும் மீனவர்களின் படகுகளை விடுவிக்க இலங்கை அரசு மறுத்துவிட்டது.












Click it and Unblock the Notifications