இலங்கை சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 78 பேர் காரைக்கால் வந்தடைந்தனர்
ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 78 பேர் நேற்று மாலை காரைக்கால் துறைமுகம் வந்து சேர்ந்தனர்.
நாகை மீனவர்கள் 50 பேர் கடந்த செப். 22-ம் தேதி முதல் அக். 27-ம் தேதி வரையிலான காலத்தில் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்களைத் தவிர புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 77 பேரும் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, சிறைகளில் அடைக்கப்பட்டனர். இவர்களின் 57 மீன்பிடி படகுகளும் இலங்கைக் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
கச்சத்தீவு அருகே நடுக்கடலில் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி அடிக்கடி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து செல்வது தொடர்ந்து வருகிறது. இதையடுத்து மத்திய- மாநில அரசு நடவடிக்கை எடுத்ததின் பேரில் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 126 மீனவர்களையும் விடுதலை செய்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் நேற்று ராமேஸ்வரம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்பட்டனர். ஆனால் 126 மீனவர்களில் 48 பேரை மட்டும் இலங்கை கடற்படை நேற்று பிற்பகலில் சர்வதேச கடல் எல்லை பகுதி அருகே இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைத்தது. இவர்களில் 41 பேர் ராமேஸ்வரத்தையும், 7 பேர் தூத்துக்குடியை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
இந்நிலையில் மீதமுள்ள 78 மீனவர்கள் காரைக்காலில் உள்ள தனியார் துறைமுகத்திற்கு வந்தடைந்தனர். இவர்களில் 49 பேர் நாகை மாவட்டத்தையும், 16 பேர் புதுக்கோட்டை மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள். மீதமுள்ள 13 பேர் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள். இவர்களை அமைச்சர் ஜெயபால் மற்றும் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி ஆகியோர் வரவேற்றனர்.