அரசு அதிகாரிகள் மீது “ஜல்லிக்கட்டு” காளை மூலம் தாக்குதல் நடத்திய 5 பேர் கைது
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அரசு அதிகாரிகளின் மீது ஜல்லிக்கட்டு காளையை அவிழ்த்துவிட்டு தாக்குதல் நடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை ஒன்றியம், உரம்பு அடுத்த செக்கான்காடு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்ரமணி. இவரது மனைவி சுமதி. இவருடைய விவசாய நிலத்துக்கு செல்லும் புறம்போக்கு நிலத்திலுள்ள பாதையை தனராஜ், சிவராஜ், ரவி, சடையன், அவரது மகன் அருள் ஆகியோர் சேர்ந்து ஆக்கிரமித்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதனால், சுமதி மற்றும் அவரது குடும்பத்தினர் கடந்த ஓராண்டாக விவசாய நிலத்துக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, சுமதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, "தன் காட்டுக்கு செல்லும் புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்" என, கேட்டுக்கொண்டார்.
இதன் பேரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வருவாய் துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். ஆனால், மறுநாளே ரவி கோஷ்டியினர். புறம்போக்கு சாலையை கல்வேலி போட்டு அடைத்தனர்.
இதையடுத்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர போவதாக சுமதி நோட்டீஸ் அனுப்பினார், இத்தையடுத்து, நேற்று காலை இராசிபுரம் டி.எஸ்.பி. ராஜூ, தாசில்தார் சுமித்ரா, இன்ஸ்பெக்டர் பரணிதரன், ஆர்.ஐ ஸ்ரீதர் ஆகியோர் அந்த இடத்துக்கு சென்று ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டனர்.
இதை பார்த்த ரவி, சிவராஜ், தனராஜ், சடையன், அருள் ஆகியோர் அதிகாரிகளை தடுத்து நிறுத்தியதுடன் அப்பகுதியில் இருந்து சோளத்தட்டு போருக்கு மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தனர். மேலும், அங்கு, கட்டியிருந்த ஜல்லிக்கட்டு காளையை அவிழ்த்து விட்டு அதிகாரிகளை தாக்க முயன்றனர். இதையடுத்து ரவி உட்பட ஐந்து பேரையும் மங்களபுரம் போலீசார் கைது செய்தனர். மேலும், தீயணைப்புத் துறை உதவியுடன் தீயையையும் அணைத்தனர்.












Click it and Unblock the Notifications